பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி குறித்த தொகுதி பங்கீடு முடிவடைந்து விட்டதால் இன்று 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் அடுத்த தேவிப்பட்டினத்தில் உள்ள கடலடைத்த பெருமாள் கோவிலில், பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், தொகுதி பங்கீடு முடிவடைந்து வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாகவும், முழுமையான பட்டியல் இன்று வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். வருகின்ற 13 ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.