புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேர் ஸ்ரீ கடற்படையால் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை மீன்வளத்துறை அலுவலக அனுமதியுடன் 180 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நள்ளிரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இதில் முத்துக்குமரன் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மணிகண்டன் (வயது 37), ராஜேந்திரன் (21), மணி (50), கலியமூர்த்தி (20), பிரபு (15), விஜயேந்திரன் என்பருக்கு சொந்தமான படகில் கோவிந்தன் (50), குணா (40), கார்த்திக் (20), சுதன் (21), அழகேசன் (19) ஆகிய 10 பேரும் வலைகளை விரித்து மீன்களுக்காக காத்திருந்தனர்.

அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வந்தது. அதிலிருந்த இலங்கை கடற்படை வீரர்கள் புதுக் கோட்டை மீனவர்களிடம் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்க உங்களுக்கு என்ன தைரியம் என்று கூறி மிரட்டினர்.

பின்னர் அவர்கள் 10 பேரையும் இரண்டு விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர். இன்று பிற்பகல் அவர்கள் 10 பேரும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

அதன்பின்னரே அவர்கள் விடுதலையாவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரியவரும்.

ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த 51 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். நட்புறவு கருதி மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என இலங்கை அரசு ஒரு வாரத்திற்கு முன்பு அறிவித்தது. மீனவர்களை விடுதலை செய்வதற்கு அந்நாட்டு அரசு தரப்பிலிருந்து பரிந்துரை கடிதமும் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை.

கொழும்புவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த இருநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் 51 மீனவர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். மேலும் 122 விசைப் படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று தகவல் வெளியானது.

எனவே இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையில் உள்ள மீனவர்கள் 51 பேரும் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழக மீனவர்கள் 10 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர்கள்இலங்கை அரசுசிறைதமிழகம்புதுக்கோட்டைமீனவர்கள்
Comments (0)
Add Comment