போரின் போது இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய அத்தியாவசிய தேவை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 90 உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பாகத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் ஸ்ரீலங்கா தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
சர்வாதிகார ஆட்சியை முடிவிற்கு கொண்டு வருவதாகக் கூறியே தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் முன்னிலையில்ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கம் உறுதிமொழிகள் சிலவற்றை வழங்கியது.
அவற்றின் பெரும்பாலானவையை நிறைவேற்ற வேண்டியதுள்ளது என 2016 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பாகத்தின் ஆசியாவிற்கான பணிப்பாளர் பிறட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் கடந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் கடப்பாட்டில் இருந்து விலகி பயணித்தது. இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அரசியலமைப்பு மறுசீரமைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து அரசியலமைப்பு சபையை ஸ்தாபித்துள்ளதுடன் மனித உரிமைகள், பொலிஸ் மற்றும் நீதித்துறையின் சுயாதீன தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் சுயாதீன ஆணைக்குழுக்களும் ஸ்தாபிக்கப்பட்டு விட்டது.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ளவர்களை விடுவிப்பதற்கும் ஆட்சி அதிகாரம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறான நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சட்டத்திற்கு முரணான தாக்குதல்கள் , கொலைகள் ,கடத்தல்கள் மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் பொறுப்புகூறலை இரு தரப்பு நியாயப்படுத்தலை வலியுறுத்தியிருந்தார்.
2015 ஆம் ஆண்டு ஓக்டோபரில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்திற்கு அமைவாக உடன்பட்டு உறுதி வழங்கியது. குறிப்பாக போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு சர்வதேச சட்ட நிபுணரகளை உள்வாங்க ஸ்ரீலங்கா அரசாங்கம் இணக்கத்தை வெளிப்படுத்தியது.
ஆகவே ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்துவதற்கும் அர்த்தப்புஷ்டியான மாற்றத்தை காண்பிப்பதற்கும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிற்கு இது சிறந்த சந்தர்ப்பம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.