சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 28–ந்தேதி நடந்த இந்த கோர விபத்து குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து அரசு உத்தரவிட்டது. கட்டிட விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தரமற்ற கட்டுமான பணிகளால்தான் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக நடந்த சோதனையில் 185 கட்டிடங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் 47 பல அடுக்குமாடி கட்டிடங்களிலும் 185 சிறப்பு கட்டிடங்களிலும் விதிமீறல் நடந்துள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கிய திட்ட அனுமதியின்படி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதா? அதில் இருந்து மாறுபட்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டு இருக்கிறதா? என ஒவ்வொன்றையும் அங்குலம் அங்குலமாக அதிகாரிகள் சோதனை செய்ததில் ஒரு சில கட்டிடங்களில் லேசான விதிமீறல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
திட்ட அனுமதியில் உள்ளபடி கட்டாமல் சிறு சிறு மாற்றங்களை செய்து சுமார் 60 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக சி.எம். டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர். பல அடுக்குமாடி கட்டிடங்கள் இரண்டு மிகப் பெரிய அளவில் விதியை மீறி அதிகளவு கட்டிடங்கள் எழுப்பப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறினர். இதையடுத்து அந்த 2 பல அடுக்குமாடி கட்டிடத்திற்கு சி.எம்.டி.ஏ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மற்ற 60 சிறப்பு கட்டிடங்களுக்கு நோட்டீஸ் தயாராகி வருகிறது.
இதுகுறித்து சி.எம்.டி.ஏ. உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நடந்த ஆய்வுப் பணியில் 2 பல அடுக்குமாடி கட்டிடங்களும் 50 முதல் 60 வரையிலான அடுக்கு மாடி கட்டிடங்களும் விதிமீறி கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதன் உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறோம். திட்ட அனுமதியில் இல்லாமல் கூடுதலாக கட்டியுள்ள கட்டிடங்களை முறைப்படுத்த வேண்டும். 15 நாட்களுக்குள் அவற்றை சரி செய்யாவிட்டால் கட்டுமான பணிகளை மேற்கொள்ளாத வகையில் ‘‘சீல்’’ வைக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளோம் என்றார்.