கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட பிரதான பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களை இலக்கு வைத்து, போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதால், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மிக அவதானமாகவும், விழிப்புடனும் இருக்குமாறு, கம்பஹா மாவட்ட தலைமையகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கம்பஹா மாவட்ட பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பிரதான பாடசாலைக்கு அருகில், ஹெரோய்ன் போதைப்பொருள் பக்கெட்டுக்களுடன் நடமாடித் திரிந்த மாணவனொருவனை, இவ்வாறு கைதுசெய்ய முடிந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள இம் மாணவனை, ஐந்து போதைப்பொருள் பக்கெட்டுக்களுடன் கைதுசெய்த பொலிஸார், மாணவனிடம் தொடர்ந்தும் மேற்கொண்ட விசாரணைகளின்போதே, மேற்கண்ட விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தனர். கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி முதித்த புஸ்ஸெல்ல, கம்பஹா தலைமையகப் பிரதான பொலிஸ் பரீட்சகர் ஏ.டப்ளியூ.ஏ. கப்பார் ஆகியோரின் பணிப்பின்பேரில், கம்பஹா பொலிஸ் பிராந்திய விழிப்புப் பிரிவு அதிகாரிகள், இம் மாணவனைக் கைது செய்து, கம்பஹா பிரதான நீதி மன்றில் ஆஜர்செய்துள்ளனர்.