வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின்போது மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை ராஜேஷ் லக்கானி செய்து வருகிறார். வாக்குப்பதிவு நடைபெறும்போது, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக என்னென்ன வசதிகள், முன்னேற்பாடுகள் செய்து தரவேண்டும் என்பது குறித்து மாற்றுத்திறனாளி சங்கங்களுடன் ராஜேஷ் லக்கானி கலந்துரையாடினார். இது குறித்து ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று வாக்குச்சாவடிகளில் ஏறி இறங்கிச் செல்வதற்காக சாய்தளங்கள் அமைக்கவேண்டும் என்றும் அங்கு சக்கர நாற்காலிகள் வைக்கப்படவேண்டும் என்றும் சங்கங்களின் சார்பில் கேட்டுக்கொண்டனர். அவர்களின் இந்தக் கோரிக்கைகளை ஏற்றிருக்கிறோம். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அவர்கள் வாக்களித்துவிட்டுச் செல்ல சாய்தளம் போன்ற வசதிகள் செய்து தரப்படும். தமிழகத்தில் மொத்தம் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில், 63 ஆயிரத்து 118 வாக்குச்சாவடிகளில் சாய்தளங்கள் உள்ளன. மற்றவற்றில் இந்தத் தேர்தலின் போது தற்காலிக சாய்தளம் அமைத்துத் தரப்படும். வாக்குப்பதிவு செய்யும்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் என்னென்ன சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன என்பதை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளால் அடையாளம் காணப்படவேண்டும்.
சின்னங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், பிரெய்லி எழுத்திலான சின்னங்களை வைக்க வேண்டும். வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் எண்ணிக்கையை அறிந்துகொள்வதற்காக, ஏற்கனவே உள்ள 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு வாக்காளரின் அடையாள எண்ணுடன் நட்சத்திர குறியீட்டையும் இணைத்து எஸ்.எம்.எஸ். அனுப்பவேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் விவரங்களை இதன் மூலம் எளிதில் அறிந்துகொள்ள முடியும். இந்த எண்ணுக்கு நாளொன்றுக்கு 4 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. இதில் சுமார் 3 ஆயிரத்து 500 அழைப்புகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. இதை மேலும் விரைவுபடுத்துவதற்காக தனி மென்பொருள் “ஆப்” ஐ தொடங்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
இதை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்ய முடியும். புகார்களுடன் புகைப்படத்தை இணைத்துவிட்டால், ஜிபிஎஸ் மூலம் இடத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். அதோடு புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அதில் காணமுடியும். வாக்களிப்பதற்கு எத்தனை மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கின்றனர் என்பதையும் இந்த “ஆப்” இல் காணலாம். பின்னர் சரியான நேரத்தை கணக்கிட்டு வாக்களிக்கச் செல்லலாம். மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி வாக்குச்சாவடிகள், தேர்தல் வாக்குறுதிகளை பிரெயில் எழுத்துகளில் வைப்பது போன்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி தொடர்பாக, வாக்குச்சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் சந்தித்து பேசியுள்ளனர். பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோரின் பெயர் விவரம், கரூர், கன்னியாகுமரி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கிடைத்துள்ளது.
மற்ற மாவட்டங்களில் இந்த விவரங்களை சேர்க்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. நாளை கட்சி ஏஜெண்டுகளும், வாக்குச்சாவடி அலுவலர்களும் மீண்டும் சந்தித்து பேசுகின்றனர். நீக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்களை கிராம சபை கூட்டங்களிலும் பார்வைக்காக வைக்கப்படும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.