கடந்த 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழாவில், இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருநங்கைகளுக்கான ’மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டி விழுப்புரம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
நாடு முழுவதிலும் இருந்து வந்த 45 திருநங்கைகள், வண்ண வண்ண உடைகளை அணிந்து கொண்டு தங்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
திருநங்கை மொபினா – முதலிடம்
நடை மற்றும் கண்கவர் வண்ண ஆடைகளுக்காக நடைபெற்ற முதல் சுற்றில் 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதையடுத்து நகராட்சி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் பாலியல், எய்ட்ஸ் விழிப்பு உணர்வு மற்றும் சமுதாய மேம்பாடு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அதையடுத்து வெற்றியாளர்களை அறிவித்தனர் நடுவர்கள்.
முதல் இடத்தை சென்னையைச் சேர்ந்த திருநங்கை மொபினாவும், இரண்டாவது இடத்தை சென்னையைச் சேர்ந்த திருநங்கை ப்ரீத்தியும், மூன்றாவது இடத்தை ஈரோட்டைச் சேர்ந்த திருநங்கை சுபஸ்ரீயும் பிடித்தனர்.
அதன்படி ‘மிஸ் கூவாகம் 2018’ பட்டத்தை முதலிடம் பிடித்த திருநங்கை மொபினா தட்டிச் சென்றார். விழாவில் சினிமா நடிகர் விமல் மற்றும் கவிஞர் சிநேகன் போன்றவர்கள் கலந்துகொண்டனர்.