டாக்டர்கள் குழுவினர் அளித்த தீவிர சிகிச்சையினால் அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதையடுத்து லண்டன் டாக்டர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் திரும்பிச் சென்றனர். அதன்பின்னர், சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் மேரி சியாங், சீமா, ஜூடி ஆகியோர் சென்னைக்கு வந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர்கள் மூலம் ஜெயலலிதாவுக்கு உடற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் நேற்று மீண்டும் சென்னை வந்தனர். நேற்று காலை 8.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அவர் எடுத்துவரும் சிகிச்சை குறித்தும் அப்பல்லோ டாக்டர்கள் குழுவினருடன் கலந்து ஆலோசித்தனர்.
பின்னர், பிற்பகல் 2 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் சீமா, ஜூடி ஆகியோர் நேற்று காலை 8.15 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா எழுந்து நிற்கவும், நடக்கவும் தேவையான சிகிச்சை மற்றும் உடற்பயிற்சியை அளித்தனர்.