முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக்கு, 124 பேர் கொண்ட கேரளாவின் சிறப்புப் படை காவல் நிலையம் இன்று திறக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை அருகில் உள்ள கேரள வனத்துறையின் கட்டடத்தில் செயல்படவுள்ள இந்த காவல் நிலையத்தை, அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா திறந்து வைக்கிறார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு கேட்டு தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த காவல் நிலையத்தின் திறப்பு விழா நடைபெறுவது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் இத்தகைய நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக அரசும் காவல் நிலைய திறப்புக்கு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை ஆணை பெற முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.