யாழ்.கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில், நான்கு பிள்ளைகளின் தாயாரான 43 வயதுடைய குடும்பப் பெண் பெண் ஒருவர் கடுமையான கத்திக் குத்துக் காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தனது தங்கை மீது நடாத்தப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலைத் தடுக்க முற்பட்ட குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேற்படி பெண்ணுக்கும் அயல் வீட்டுக்காரருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அயல்வீட்டைச் சேர்ந்த சிறுவன் குறித்த பெண்ணைக் கத்தி கொண்டு அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேற்படி சிறுவன் தலைமறைவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கேள்விப்பட்டுத் தனது தங்கையின் வீட்டிற்கு அக்கா சென்ற சமயத்தில் அங்கு சென்ற சிறுவன் மேற்படி பெண்ணைக் கத்தியால் குத்த முயன்றுள்ளான். இதனைத் தடுக்க முயன்ற போதே குறித்த பெண்ணின் வயிற்றுப் பகுதியிலும், கையிலும் படுகாயமடைந்துள்ளார்.
இந்தநிலையில் படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.