ராகுல் காந்தி பற்றிய விவரங்களை டெல்லி போலீசார் சேகரித்தது வழக்கமான நடைமுறை தான் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தியை மத்திய அரசு உளவு பார்ப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதுபற்றி அரசுத்தரப்பு விளக்கமளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லியில் வசிக்கும் முக்கிய நபர்கள் பற்றிய அடிப்படை விவரங்களை சேகரிப்பது வழக்கமான நடைமுறை என கூறினார்.
1987ஆம் ஆண்டு முதலே அனைத்து முக்கிய பிரமுகர்களின் விவரங்களை சேகரிக்கும் முறை வழக்கத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் அருண் ஜெட்லியின் விளக்கத்தை ஏற்க மறுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையிலும் காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விவகாரத்தை எழுப்பினார். தனி நபரின் சுதந்திரத்தில் போலீசார் தலையிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தற்போதைய பிரதமர், முன்னாள் பிரதமர்கள்,அமைச்சர்கள், சோனியா காந்தியின் அடிப்படை விவரங்கள் வரை போலீசார் சேகரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற்றை சரி பார்ப்பது வழக்கமான நடைமுறைதான் என கூறினார்.
யாரையும் உளவு பார்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் காங்கிரஸ் இதை அரசியலாக்குவதாகவும் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.