வந்தவாசியில் வேன் கவிழ்ந்து 9 பேர் படுகாயம்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவன வேன் இன்று காலை தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்தவாசி– திண்டிவனம் சாலையில் சென்று கொண்டிருந்தது.

வந்தவாசி அருகே உள்ள தனியார் பெண்கள் கல்லூரி அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து சென்ற சிறுவன் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய வேன் சாலையோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த பெண் தொழிலாளர்கள் கனிமொழி, பவானி, பூஜா, பிரவீணா, மீனா, ரோகினி, தேவிபிரியா, மோட்டார் சைக்கிளில் வந்த கீழ்நெமிலி கிராமத்தை சேர்ந்த ரகுராமன்(வயது18). சாலையில் நடந்து சென்ற சிரஞ்சீவி(14) ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

வந்தவாசி வடக்கு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதில் கனிமொழி, பவானி, பூஜா ஆகியோர் காஞ்சிபுரம் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

9 பேர்கவிழ்ந்துபடுகாயம்வந்தவாசியில்வேன்
Comments (0)
Add Comment