வாக்களார்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்த பின்னர் அவர்களது கையில் மை இடுவது வழக்கம். இந்நிலையில் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மை அழிந்து போவதாக பரபரப்பான புகார் எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை புதுவார்டு நேருநகர் 8வது தெருவில் உள்ள இசிஐ மெரிட் மேல்நிலைப்பள்ளியில் 14 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் ஏராளமான வாக்காளர்கள் வாக்களித்து வந்தனர். திடீரென மின்சாரம் தடைபட்டு மீண்டும் வந்தது. அப்போது வாக்காளர்கள் கையில் வைக்கப்பட்டிருந்த மை அழிந்து போனது, இதனை கவனித்த எதிர்கட்சியை சேர்ந்த பூத் ஏஜென்டுகள், அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து வாக்குபதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
அதிகாரிகளுக்கு தெரியாமல் இது எப்படி நடக்கும், கள்ள ஓட்டு போடுவதற்காகவே இது மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றனர் என எதிர்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.