ஸ்ரீலங்காவில் ஐநா பணியாளர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா?

ஸ்ரீலங்காவில் ஐக்கிய நாடுகள் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டு குறித்து கவனம் செலுத்தப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது குறித்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஸ்ரீலங்கா கிளையில் பணியாற்றிய பணியாளர் ஒருவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சாட்சியமளித்திருந்தார்.
 
இந்த விடயம் குறித்தே இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர் என்ற போதிலும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக எதுவும் செய்யப்படவில்லை எனவும், தற்போது சென்னையில் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குறித்த பணியாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நாஐக்கிய நாடுகள் சபைதுன்புறுத்தல்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment