இந்த நிலையில் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய-மாநில அரசுகள் கூறியதை தொடர்ந்து நேற்று மீனவர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.
இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 20-க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களிடம் அதிக கெடுபிடிகளுடன் நடந்து கொண்டனர்.
அவர்கள் இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது. மீறினால் சிறை பிடித்து செல்வோம் என எச்சரித்ததோடு மீனவர்களின் வலைகளையும் அறுத்து எறிந்து சேதப்படுத்தினர். மேலும் சில மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் தாக்கினர். இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் பாதியிலேயே அவசர அவசரமாக கரை திரும்பினர்.
வழக்கமாக கச்சத்தீவு பகுதிகளில் 4 அல்லது 5 சிறிய கப்பல்களில் தான் இலங்கை கடற்படையினர் ரோந்து மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது 20-க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் சுற்றி வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடல் வளத்தை அழித்து வருவதாக கூறி அந்நாட்டு மீனவர்கள் நேற்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்தா அமரவீராவிடம் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அவர் இலங்கை பகுதியில் மீன் பிடிக்க வரும் இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். அவரின் அறிவிப்பை தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையின் ரோந்து அதிகமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.