முதுமைக்காலத்தில் இருந்த டேவிட் குட்ஆலுக்கு கொடிய நோய்கள் இல்லை என்றாலும், அவரது வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமடைந்து வந்ததால் சட்ட உதவியுடன் தனது உயிரைத் துறந்தார்.
ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டேவிட் குட்ஆல் (வயது 104).
தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விஞ்ஞானி டேவிட் குட்ஆல் விரும்பினார்.
தனது தற்கொலைக்கு உதவுமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
\ஆனால் ஒருவரின் தற்கொலைக்கு உதவுவது சட்டவிரோதம் என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் நாடுகளில், ஆஸ்திரேலியாவும் ஒன்று. எனவே டேவிட்டின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.
அதேநேரம் சுவிட்சர்லாந்தில், தங்கள் வேலையை தாங்களே செய்யும் அளவுக்கு உடல் ரீதியாக திடகாத்திரமாக இருக்கும் ஒருவர், நீண்ட காலமாக தானாகவே இறக்கும் கோரிக்கை கொண்டிருந்தால், அவரது தற்கொலைக்கு உதவுவது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் உயிரை நீத்தார்
எனவே ஆஸ்திரேலிய அரசின் புறக்கணிப்பால் விரக்தியடைந்த டேவிட் குட்ஆல் , சுவிட்சர்லாந்துக்கு வந்தார். அவரது அமைதியான மரணத்துக்கு உதவ முன்வந்த ‘எக்சிட் இன்டர்நேஷனல்’ நிறுவனம், அவரது பயணத்துக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தது.
அதன்படி சுவிட்சர்லாந்து வந்திறங்கிய அவர், பசல் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று காலையில் விஷ ஊசி செலுத்தி மரணம் விளைவிக்கப்பட்டது.
அவர் அமைதியாக மரணித்ததாக எக்சிட் அமைப்பின் நிறுவனர் பிலிக் நிட்ஸ்கி கூறினார்.
முன்னதாக நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த டேவிட் குட்ஆல், தனது வாழ்வை முடித்துக்கொள்ள ஆர்வமாய் இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவிலேயே இந்த வசதியை ஏற்படுத்தி தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் கூறினார்.
இனி மேலாவது இத்தகைய நடவடிக்கைக்கு அனுமதிப்பது குறித்து ஆஸ்திரேலியாவும், பிற நாடுகளும் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.