தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க 234 தொகுதியிலும் அ.தி.மு.க.வினர் பதுக்கி வைத்துள்ள பணத்தை தேர்தல் கமிஷன் பறிமுதல் செய்யாவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் விரும்புகிறார்கள். புதிய எழுச்சியுடன் மக்கள் காணப்படுகிறார்கள். எனவே 234 தொகுதியிலும் அ.தி.மு.க. தோற்பது உறுதி. தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதியிலும் அ.தி.மு.க.வினர் பணம் பதுக்கி வைத்துள்ளனர்.
இந்த பணத்தை கண்டுபிடித்து கைபற்ற வேண்டும் என்று தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருக்கிறோம். தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வினர் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை கண்டு பிடித்து மீட்கும் என்று நம்புகிறோம். அப்படி செய்யாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். சென்னை, கரூரில் பதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த பிறகு பின்னணி பற்றி ஊடகங்கள் சரியாக செய்திகளை வெளியிடவில்லை.
இதனால் முழு விவரம் மக்களுக்கு தெரியவில்லை. வைகோ தேர்தலில் போட்டியிடாதது குறித்து எதுவும் பேசவிரும்பவில்லை. மதுவிலக்கை அமல்படுத்துவது பற்றி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முழுவதுமாக விரிவாக சொல்லவில்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருப்பது தவறான குற்றச்சாட்டாகும். இவ்வாறு அவர் கூறினார்.