500 ஆண்டுகளுக்கு முன்னர் வாஸ்கொடகாமா இந்தியா செல்லும் வழியில் நொறுங்கிய எஸ்மரால்டா கப்பலின் சிதைந்த பாகங்கள் என நம்பப்படுகிறது.
ஐரோப்பிய ஆய்வாளர்கள் குழு ஒன்று இதுகுறித்து நடத்திய ஆய்விலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓமன் நாட்டின் தோபர் பகுதியில் 1503 ஆம் ஆண்டு அந்த கப்பல் மூழ்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வு தொடங்கும் முன்னர் வரலாற்று பதிவுகளும் இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பியவர்களின் கருத்துகளையும் ஆராய்ந்த பின்னரே முடிவுக்கு வந்ததாக அந்த ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கப்பல் மூழ்கியதாக ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து ஒட்டுமொத்தமாக 2800 பொருட்களை ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர்.
புதிதாக மீட்கப்பட்டுள்ள இந்த தொல்பொருள்களின் உதவியுடன் வாஸ்கொடகாமா குறித்து மேலும் பல தகவல்களை உலகிற்கு வழங்கலாம் என ஆய்வாளர்கள் கருகின்றனர்.
ஓமன் அரசு இதற்கு முன்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு கப்பல் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் பகுதியில் முதன்முறையாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டது.
தொடர்ந்து 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டும் அங்கிருந்து மீட்கப்பட்ட தொல்பொருட்களை பத்திரப்படுத்தியும் வருகிறது.இந்தியா நோக்கி வாஸ்கொடகாமாவின் இரண்டாவது வருகையின் போது அவருடன் பயணமான இரண்டு கப்பல்களில் ஒன்று ஓமான் பகுதியில் மூழ்கிய எஸ்மரால்டா என்பது குறிப்பிடத்தக்கது.