தமிழ்நாட்டிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர், கடத்தி வெளிநாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு, பின்னர் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தால் வாங்கி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு புராதனச் சிலைகளை, இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் நேற்று இந்தியப் பிரதமரிடம் முறைப்படி ஒப்படைத்தார். இவை இரண்டும் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானவை.
ஆஸ்திரேலியாவால் திருப்பியளிக்கப்பட்ட இரு சிலைகளில் ஒன்றான நடராஜர் சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது. இது அரியலூரில் உள்ள ஒரு ஆலயத்தில் பூஜை செய்யப்பட்டு வந்தது. கருங்கல்லில் செதுக்கப்பட்டிருந்த அர்தநாரீஸ்வரர் சிலை விருதாச்சலம் விருதகிரீஸ்வரர் ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் பதிக்கப்பட்டிருந்தது.
இவை இரண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், திருடப்பட்டு பல கைகள்மாறி, கடைசியாக ஆஸ்திரேலிய அருங்காட்சியத்துக்கு விற்கப்பட்டன. எனினும் இந்தியத் தரப்பின் முயற்சிகள் காரணமாக, வழக்குகள் ஏதுமின்றி இவை இந்தியாவிடம் திருபியளிக்கப்பட்டுள்ளன.
பாண்டிச்சேரியிலுள்ள பிரெஞ்சு கலைக்கழகத்தின் ஆவணங்களில் இருந்த புகைப்படங்கள் மூலமே இவை தமிழகத்தைச் சேர்ந்தவை என்று உறுதி செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் இந்தியவிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது குறித்து, இந்தியத் தொல்லியல் கழகத்தின் முன்னாள் தலைவர் டி சத்தியமூர்த்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த தகவல்களை இங்கே கேட்கலாம்.