கர்நாடக அணைகளில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தவரவால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது.
இந்த நீர் நேற்று முன்தினம் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. நீர்வரத்து அதிகரிப்பால், நேற்றைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீர் வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 76.74 அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,250 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.