சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சமீப காலமாக வீழ்ச்சியடைந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல்-டீசல் விலை குறைந்து வருகிறது.
ஆனால் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தியது. இதனால் இந்த விலை குறைவின் பயனை இந்திய நுகர்வோர்களால் முழுமையாக பெற முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 15 நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 4 டாலர் வரை குறைந்தது. இதனால் எண்ணெய் நிறுவனங்களின் நேற்றைய விலை மாற்றியமைப்பில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.04-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.53-ம் குறையும் நிலை உருவானது. ஆனால் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை முறையே ரூ.1, ரூ.1.50 என்ற அளவில் மத்திய அரசு நேற்று முன்தினம் உயர்த்தியது. இதனால் பெட்ரோலுக்கு வெறும் 4 காசுகளும், டீசலுக்கு 3 காசுகளுமே குறைந்தது. இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.