காணாமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்து பேசிய நிசா பிஸ்வால்

யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் போரின் நிறைவில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.

காலை 11மணி தொடக்கம் 12 மணிவரையில் மேற்படிச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது போர் நிறைவடைந்த பின்னர் படையினரிடம் குடும்பமாக ஒப்படைக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டிருந்தனர். மிக இரகசியமாக நடைபெற்ற மேற்படிச் சந்திப்பில் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் சந்திப்பு தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், போரின் நிறைவில் படையினரிடம் எங்கள் உறவினர்களை ஒப்படைத்தமைக்கு சாட்சியாக நாங்கள் இருக்கின்றோம். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என அரசாங்கம் கூற முடியாது. அவர்கள் தொடர்ந்தும் இரகசிய முகாம்களில் உள்ளனர். இந்த விடயம் சர்வதேச நாடுகளுக்கும் தெரியும்.

எனவே அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்கள் காணாமல் போய்விட்டதாக கூறி அவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் அரசின் நடவடிக்கைக்கு சர்வதேசம் நடவடிக்கை எடுக்கவேண்டும். என்பதை நாங்கள் கண்ணீர்மல்க சுட்டிக்காட்டியுள்ளோம்.

உறவினர்கள் அல்லது குடும்பத்திற்கு உழைக்க வேண்டிய பிள்ளைகள் காணாமல் போன நிலையில், வடக்கு மாகாணத்தில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் வறுமையோடு போராடிக்கொண்டு குடும்பத் தலைமைகளை ஏற்று நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அதனை நிசா தேசாயும் ஒரு பெண் என்ற வகையில் புரிந்து கொள்வார் என்பதை நம்புகின்றேன் எனவும் அனந்தி  தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை (01-02-2014) காலை 11.10 மணியளவில் யாழ் நகரில் உள்ள பிரதான விருந்தினர் விடுதியில் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜங்க செயலாளர் நிஷா டேஷாய் விஸ்வால் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மைக்கல் சிசன் ஆகியோரை சந்தித்து யுத்தத்தின் பின்னர் நடைபெற்ற 700 மனித உரிமை மீறல்கள் 700 உயர்பாதுகாப்பு வலய பிரச்சனைகள் 700 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் வலிவடக்கு பிரதேசசபை துணைத் தவிசாளர் சஜீவன் அவர்கள் சந்து உரையாடினார்.

நிசா பிஸ்வால்
Comments (0)
Add Comment