அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு மகஜர்

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கரைச்சிப் பிரதேசசபை உறுப்பினர்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பும் வகையிலேயே கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் நேற்று 2014-01-01  புதன்கிழமை இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்த பின்னும் அதனால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

யுத்தம் நிறைவடைந்த ஐந்தாவது ஆண்டான 2014ஆம் மே மாதம் 18ஆம் திகதிக்கு முன்பாக இந்த விடுதலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அந்த மஜரில் கோரப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேசசபையின் தவிசாளர் வை.குகராஜா தலைமையில் பிரதேச சபையின் உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டுள்ள, இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தணித்துக்கொள்ளக்கூடிய யுத்தத்தின் விளைவுகளை பல்வேறு சவால்களோடு தாங்கள் எதிர்நோக்கி வருகிறீர்கள்.

யுத்த விளைவுகளின் தொடர்ச்சியாக இருக்கின்ற அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எமது மக்கள் பலத்த எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருப்பதனால், சிறையிருப்பவர்களிடையேயும் அவர்களின் குடும்பங்களிடையேயும் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

உளத்தாக்கங்கள், பொருளாதாரப் பாதிப்புகள், கல்வி, கலாசாரப் பாதிப்புகள் என சமூகக் கட்டமைப்பே சிதையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், குடும்பங்கள் சிதைவடைதல் என்ற நிலைமையும் காணப்படுகிறது. எனவே இவை தொடர்பாக எமது சபையில் கவனம் எடுக்கப்பட்டு, அதைத் தங்களின் கவனத்திற்கும் கொண்டு வருகிறோம். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் சமூக மயப்பட்டிருப்பதைப் போன்று, ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலையையும் சாதகமான முறையில் பரிசீலித்து ஆவண செய்யுங்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்கைதிகள்
Comments (0)
Add Comment