முல்லைத்தீவு கோப்பாப்புலவு மக்கள் கடும் இராணுவ கெடுபிடிகளை எதிர்நோக்கி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்கள் சொல்லெண்ணாத் துயரங்களை அனுபவித்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு , வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மக்கள் இடம்பெயர்ந்தனர். இவர்கள் 2014ஆம் ஆண்டு கோப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் மீளக் குடியேற்றப்பட்டனர். இந்த நிலையில் இராணுவத்தினர் தமது பாரம்பரிய காணிகளை கையகப்படுத்தி அவர்களுக்கு தேவையான கட்டடங்களை நிர்மாணித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மாதிரிக் கிராமத்தில் குடியமர்த்தப்பட்டமையால் தமது வாழ்வாதாரமும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே வேளை பல குடும்பங்கள் தமது காணிகளை மீட்ப்பதற்காக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் எனினும் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை கைவிடவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.