2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் ஸ்ரீலங்காவின் நிலைமை மேம்பட்டுள்ளதை அடுத்தே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக சுவிஸ் அரசாங்கம் கூறியுள்ளது.
இலங்கையில் கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமை நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக சுவிட்ஸர்லாந்தின் குடியேற்றத்திற்கான செயலகம் கூறியுள்ளது.
அதன்காரணத்தால் ஊடகவிலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளுக்கான அகதி அந்தஸ்து வழங்கப்படும் போது மேலும் கடுமையான நிபந்தனைகளை கடைபிடிக்க சுவிஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த கசப்பான யுத்தத்தின் பின்னர் தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பதற்கான தேவை குறைவடைந்துள்ளதாக சுவிஸ் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் சில விடயங்களில் தொடர்ந்தும் இடைவெளிகள் உள்ளதை ஏற்றுக்கொண்ட சுவிஸ் அரச அதிகாரிகள், குறிப்பாக புகலிடக் கோரிக்கைகளை ஆய்வுசெய்யும் போது மனித உரிமை விடயங்கள் மற்றும் பிரத்தியேக சூழ்நிலைகள் கருத்தில் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு மே மாதம் வரை ஆயிரத்து 316 இலங்கையர்களின் புகலிட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக சுவிஸர்லாந்து குடியேற்ற செயலகம் கூறியுள்ளது.
இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்களை சுவிட்ஸர்லாந்து உள்வாங்கியுள்ளதுடன், அவர்களில் 3 ஆயிரத்து 674 பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது.
இவர்களில் ஆயிரத்து 613 பேர் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுவிஸ் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எவ்வாறாயினும் நாடு கடத்தப்படுவோர் தமிழீழ விடுதலை புலிகளின் அனுதாபிகளாக கருதப்படும் ஆபத்து உள்ளதாக சுவிஸ் ஈழத் தமிழர் பேரவையின் உப தலைவர் அனா அனூர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்காவிற்கு நாடு கடத்தப்படுவோர் விமான நிலையங்களில் வைத்தே விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர்கள் துன்புறுத்தப்பட்டு, சிறைவைக்கப்படும் நிலைமை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின் போது கைதுசெய்யப்பட்ட பலர் தற்போதும் சிறைகளில் உள்ளதாக சுவிஸ் ஈழத் தமிழர் பேரவையின் உப தலைவர் அனா அனூர் மேலும் சுட்டிக்காட்டினார்.