ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாண சபை உறுப்பினர்களுக்குமான ஒரங்கிணைப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரால் தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. விசேடமாக தேசியப்பட்டியல் விவகாரம், ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தமை, அரசியல் கைதிகள் உட்பட பொதுமக்கள் குறித்த பொதுப்பிரச்சினைகள் குறித்த செயற்பாடுகள், தொடர்பில் கலந்தாலோசிக்கப்படாது முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பினுள் சர்சைகள் வலுத்திருந்தன.இதனையடுத்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியினர், வட மாகாணசபையின் சில உறுப்பினர்கள், கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடத்தல் நேரடியாகவும் கடிதம் மூலமாக கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
மறுபக்கத்தில் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஷ்வரனை இணைத்தலைமையாகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதனாலும் கூட்டமைப்பினுள் குழப்பகரமான நிலைமைகள் எழுந்திருந்தன. இவ்வாறானதொரு சூழலில் தற்போது புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான பிரேரணை பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தரப்பினரதும் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமைகளிலேயே இவ்வொருங்கிணைப்பு கூட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசமைப்பு தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு, இனப்பிரச்சினை தீர்வு குறித்த வரைவை உருவாக்குதல், ஐ.நா. தீர்மானம், மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உட்பட சமகால சர்ச்சைகள் , அடுத்து முன்னெடுக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை வௌ்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தனும் பங்கேற்கவுள்ளார். இதன்போது தமிழரசுக்கட்சியின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரியவருகின்றது.