இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் பெரும் சொத்தாக விளங்கும் இரணைமடுக்குளம் பெருந்தொகைப் பணத்தில் புனரமைப்புச் செய்யப்படும் நிலையில் அப்பணிக்கான மண்ணைப் பெற்றுக் கொள்வதில் உள்ள இடையூறு காரணமாக குளப்புனரமைப்புத் தடைப்பட்டுள்ளதாக விவசாயிகள் கடந்தவாரம் ஜனாதிபதி , பிரதமர் ஆகியோருக்கும் எனக்கும் அவசர கடிதம் எழுதியிருந்தனர்.
இது தொடர்பில் குறித்த குளப்பகுதிக்கு நேரில் சென்று விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் , உரிய திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் ஆகியோரையும் அழைத்து இது தொடர்பான தகவலைக் கேட்டறிந்த தோடு குளத்தின் தற்போதைய நிலமையினையும் நேரில் பார்வையிட்டேன்.
குறித்த பணிக்காக இரணை மடுக்குளத்தின் கீழ் இந்த ஆண்டு இடம்பெறவேண்டிய 20 ஆயிரம் ஏக்கர் சிறுபோக நெற்செய்கை முழுமையாகவே இடம்பெறவில்லை.
இந்த நிலையில் உள்ளூர் மூலப் பொருள் ஒன்றைப் பெறுவதில் உள்ள இடையூறு காரணமாக பெரும் பணியினை தடைப்பட அனுமதிக்கலாகது. இதேவேளை இப் பொருளினை பெற்றுக் கொள்ளும் இடமானது முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்திற்குரிய எல்லைப் பிரதேசம்.
எனவே உடனடியாக திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் மற்றும் உரிய திணைக்களம் ஆகியவற்றுடன் பேசி அது தொடர்பில் ஓர் அறிக்கையினை உடனடியாக பிரதமர் செயலகத்திற்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
ஏனெனில் இக்குளத்தின் புனரமைப்புப் பணி தடைப்படுமானால் அடுத்த ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கையும் பாதிப்படையும் இதன்காரணத்தினால. 9 ஆயிரம் விவசாயிகள் பாதிப்படைவதோடு மாவட்டத்தின் வருமானமும் பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம் ஏற்படலாம் . எனவே இது தொடர்பில் உடன் ஆவண செய்ய வேண்டிய தேவையுள்ளது. என்றார்.