பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப் பேர் நேற்று புதன்கிழமை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளில் 17 பேர் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் பலர் நேற்று கொழும்பு நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களில் எட்டுப் பேரை விடுதலை செய்வதற்கு இணக்கம் தெரிவித்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார், ஏனையவர்களை விரைவில் விடுதலை செய்வது குறித்து அறிவிப்பதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த எட்டுப் பேரை விடுதலை செய்த நீதிவான் ஏனையவர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானுடன் தொடர்புடைய முக்கியஸ்தர் எனக் குறிப்பிடப்பட்டு, 2014 ஆம் ஆண்டு மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த செல்லத்துரை கிருபாநந்தனும் அடங்குகின்றார்.
கடந்த இரண்டு வருடங்களாக மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் நல்லூரடியைச் சேர்ந்த செல்லத்துரை கிருபாகரன் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.