தொண்டமனாறு தடுப்பணை சீரமைப்பு பணி தொடக்கம்!

உலக வங்கியின் ரூபா 399  மில்லியன் நிதியுதவியில் தொண்டமானாறு தடுப்பணையின் சீரமைப்புப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
தொண்டமானாறு உவர் நீரேரியில் மழைநீரைச் சேமிக்கும் நோக்கிலும், கடல்நீர் ஏரிக்குள் வராமல் தடுக்கும் நோக்கிலும் ஏற்கனவே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மடைக்கதவுகள் உருக்கால் செய்யப்பட்டவை என்பதால் துருவேறிப் பழுதடைந்துள்ளன. தற்போது 300 மில்லியன் ரூபா செலவில் துருப்பிடிக்காத உருக்கினாலான மடைக்கதவுகள் கொண்டதாகத் தடுப்பணை சீரமைக்கப்பட உள்ளது.
தொண்டமானாறு ஏரியில் தடுப்பணையின் மடைக்கதவுகளை மூடி மழைநீரைச் சேகரிக்கும்போது தாழ்வான வயல்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுகின்றது. அதைத் தடுக்கும் நோக்குடன் இரண்டு இடங்களில் வெள்ளத் தடுப்பணைகளும் கட்டப்பட உள்ளன சீமெந்துக் கட்டுமானப் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பணைகளுக்கென 99 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது
வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள புனரமைப்பு வேலைகள் இரண்டு வருடங்களில் முடிவடையும்
நிகழ்வில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகான விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்ததாவது,
வடக்கில் 10 சதவீதமான பகுதியை நீர் ஏரிகளே பிடித்து வைத்திருக்கின்றன. அவற்றைச் சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். வடக்கில் உள்ள குளங்களுக்கு ஏனைய மாகாணங்களிலிருந்து நீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதனூடாக வடக்கு மாகாண அரசின் கீழ் உள்ள குளங்கள் மத்திய அரசுக்குச் செல்லும் அபாயம் உள்ளது என்றார்
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ. சரவணபவன் , சி. சிறிதரன்  , த.சித்தார்த்தன் , வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் க.சிவாஜிலிங்கம் , க.தர்மலிங்கம் , சி.அகிலதாஸ் , மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி வே.பிறேமகுமார் , பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி ந.சுதாகரன்
பிரதிப் பிரதம செயலாளர் சோ.சண்முகானந்தன் ஆகியோருடன் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

கடல்நீர்குடியிருப்புசீரமைப்புதொண்டமனாறுநீர்மழைமழைநீர்வயல்கள்
Comments (0)
Add Comment