மட்டு ஊரணி காந்தி கிராமங்களுக்கு விரைவில் அடிப்படை வசதிகள்! வியாலேந்திரன்

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட சின்ன ஊரணி மற்றும் காந்தி ஆகிய கிராமங்கள் அடிப்படை வசதிகளற்ற பகுதிகளாக காணப்படுகின்றது. போக்குவரத்து, குடிநீர் போன்ற வசதிகளும் சிறப்பாக அற்ற நிலையில் குறித்த பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பெரும் சங்கடங்களை எதிர்கொண்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
குறித்த பகுதிகளுக்கு அவர் நேற்று திங்கட்கிழமை சென்று பார்வையிட்டதோடு, பிரதேச மக்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார். இந்த இரண்டு கிராமங்களிலும் உள்ள உள் வீதிகளில் 90 வீதமானவை போக்குவரத்திற்கு உகந்ததாக காணப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அவ்வீதிகள் ஊடாக அவசர சந்தர்ப்பங்களில் நோயாளர்களை கொண்டு செல்லவும் முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறினார்.
மேலும், இந்த கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஓலைக் குடிசைகளிலும், பூர்த்தி செய்யப்படாத வீடுகளிலும் வாழ்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தொடர்பில் மாநகர சபை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்த போதிலும், இவற்றை சீர் செய்வதற்குரிய நிதி போதுமானதாக இல்லை என்று பதிலளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அடுத்த நாடாளுமன்ற அமர்வு நாட்களில் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இது குறித்து தெளிவுபடுத்தி தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக சின்ன ஊரணி மற்றும் காந்தி ஆகிய கிராம மக்களிடம் அவர் உறுதியளித்துள்ளார்.
அடிப்படைஊரணிகாந்திகிராமங்களுக்குமட்டு.விரைவில்
Comments (0)
Add Comment