இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் பேசாலை கடற்பிராந்தியத்தில் காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது பற்றி தெரிய வருவதாவது, பேசாலை காட்டாஸ்பத்திரியைச் சேர்ந்த காட்டுராஜா நல்லதம்பி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையுடன் மேலும் ஆறு மீனவர்கள் இரு படகுகளில் சுருக்கு வலை மூலம் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
காட்டாஸ்பத்திரி கடற்கரையிலிருந்து காலை 8 மணிக்கு இவர்கள் பேசாலை கடற்பரப்புக்குள் கரையிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் சுருக்கு வலை மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடலுக்குள் போடப்பட்ட வலை கொழுவப்பட்டதால் அதை சரி செய்வதற்காக கடலுக்குள் குதித்ததாகவும் பின் இவர் கடலின் மேற்பரப்புக்கு நீண்ட நேரமாக வராமையினால் இறந்தவருடன் மீன் பிடிக்கச் சென்றவர்களுக்கும் நீந்த தெரியாததினால் கடலுக்குள் இவரை தேட முடியாதவர்களாக கரையிலிருந்தவர்களுக்கு கையடக்க தொலைபேசியின் மூலம் தகவலை பரிமாறியதைத் தொடர்ந்தே கரையில் இருந்தவர்கள் உடன் சென்று இறந்தவரை சடலமாக மீட்டனர்.
இவர் வலையில் சிக்குண்ட நிலையிலேயே இவரை சடலமாக மீட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் சடலத்தை பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு தலைமன்னார் பொலிசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பேசாலை பகுதியில் சுருக்கு வலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டு இறந்தவர்களில் இது இரண்டாவது சம்பவம் என பேசாலை வைத்தியசாலை அதிகாரி வைத்திய கலாநிதி இம்மானுவேல் ஈற்றன் பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.