“கடந்த அரசிலே கிட்டத்தட்ட 11,900 தொளாயிம் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. அதில் கணிசமானவர்கள் இங்கே இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு கடந்த அரசு எந்தவொரு பாரிய திட்டங்களையும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. இந்த அரசு வந்த பின்னரும் இந்த முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுக்குமாறு நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நேரத்திலே கனடாவில் உள்ளவர்கள் கல்விக்கு உதவி செய்ய முன்வந்தார்கள். வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தார்கள். ஆனால் அருமை நண்பர் செந்தில் குமரன் முதலாவதாக சொன்ன வார்த்தை எங்களது முன்னாள் போராளிகளது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
நான் சொன்னேன் நீங்கள் கட்டாயம் ஒருமுறை மட்டக்களப்பு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எனது வேண்டுகோளை ஏற்று இன்று அவர் எங்கள் மத்தியில் இருக்கிறார்” இவ்வாறு கரடியனாறு பிரதேசத்தில் நடைபெற்ற செந்தில் குமரன் மறுவாழ்வு அமைப்பின் ஆதரவில் நடந்த வாழ்வாதார நிகழ்ச்சியில் பேசும் போது மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.
தொடர்ந்து பேசிய வியாழேந்திரன் “வெளிநாட்டில் உள்ளவர்களில் பலர் தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்ந்தால் போதும் என எண்ணி இந்த நாட்டை மறந்து விடுவது, உறவுகளை மறந்துவிடுவது என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அருமை நண்பர் செந்தில் குமரன் அவர்களைப் பொறுத்தளவில் 2009 க்கு முன்னர் சரி அதன் பின்பும் சரி எமது மக்களுக்கு பல வாழ்வாதார உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அந்த உதவிகள் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் செய்யப்பட்டன. இப்போது கிழக்கு மாகாணத்துக்கும் உதவிகள் செய்ய முன்வந்துள்ளார்.
எமது பகுதியில் பல இன்னல்களுக்கு மத்தியில் முன்னாள் போராளிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலருக்கு அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணம் ரூபா 3,000 கிடைப்பதில்லை.
இங்கே மூன்று தலைமுறைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முதல் தலைமுறை இவர்களது பெற்றோர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உடல் ஊனமுற்ற இரண்டாலணது தலைமுறை பாதிக்கப்பட்டுள்ளார்கள். மூன்றாம் தலைமுறையான இவர்களது பிள்ளைகள் வறுமை காரணமாக அவர்களது கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எமது நாலாவது தலைமுறையும் பாதிப்படையக் கூடாது.
புலம்பெயர் தமிழர்கள், செந்தில் குமரன் அவர்களைப் பின்பற்றி இப்படியான வாழ்வாதார உதவிகளைச் செய்ய முன் வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். யாழ்ப்பாணத்தோடு ஒப்பிடும் போது கிழக்கு மகாணத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் மிகக் குறைவு. அதே நேரம் இங்கேதான் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எத்தனையோ மாவீரர் குடும்பங்கள் இங்கு இருக்கிறார்கள்.
ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகளை இழந்தவர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நடக்கும் கரடியனாறு போன்ற படுவான்கரை பிரதேசமானது போராட்ட காலத்தில் மிகவும் முக்கியம் பெற்ற இடம். பல முன்னாள் போராளிகளைக் கொண்டதும் அதிகமான மாவீரர்களையும் இழந்த இடமும் இதுதான்.
இந்தச் சூழலிலே முதற்தடவையாக மட்டக்களப்புக்கு கனடாவில் இருந்து வந்து முன்னாள் போராளிகள் சிலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்த முதலாவது மனிதர் யாரென்றால் அது செந்தில் குமரனாகவே இருக்கும். இந்த இடத்திலே அவருக்கு எமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்து இந்த நிகழ்வில் பேசிய செந்தில் குமரன் “இந்தப் பணம் முழுக்க முழுக்க எனது முயற்சியால் வந்த பணமே தவிர என்னுடைய பணம் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து கலைஞர்களைக் கூட்டி வந்து புனர்வாழ்வுப் பணிகளுக்கு 2009 க்கு முன்னர் கிட்டத்தட்ட டொலர் 700,000 சேர்த்திருக்கிறேன். அந்தப் பணத்தில் முழங்காவில் என்ற ஊரில் ஒரு வீடுகட்டும் திட்டத்தை தொடங்க திட்டமிட்டிருந்தோம். அதற்கான அத்திவாரக் கல் கூட போடப்பட்டது.
ஆனால் 2006 இல் போர் மீண்டும் தொடங்கியதால் அந்தத் திட்டத்தை செய்ய முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் போரின் கடைசிக் கட்டத்தில் சிக்குண்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க தமிழர் புனர் வாழ்வுக் கழகம் அந்தப் பணத்தை பயன்படுத்தியது.
நீங்கள் நன்றி சொல்வதென்றால் கனடிய தமிழ் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அங்குள்ள 90 வீத மக்கள் நீங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
அவர்களில் சிலர் வசதியில்லாமல் வாழ்ந்தாலும் நான் நிதி என்று கேட்ட பொழுதெல்லாம் கடனட்டையில் அடித்து கொடுத்திருக்கிறார்கள். அப்படியான தெய்வங்களை நான் நேரில் கண்டவன். நான் கோயிலுக்குப் போவதில்லை. ஒன்று நேரம் கிடைப்பதில்லை. மற்றது மனிதர்கள் இடத்திலேயே நாம் தெய்வங்களைக் காணலாம்.
2009 க்கு முன்னரும் அதன் பின்னரும் இங்கு வந்து போவது சுலபமாக இருக்கவில்லை. ஆனால் இப்போது வந்து போகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது பற்றி நான் சந்தோசப்படுகிறேன். முன்னாள் போராளிகள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பது எனது ஆசை. அதனால்தான் முதற் கட்டமாக ரூபா 8 இலட்சத்தை அனுப்பி வைத்தேன். கனடிய அரசுக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் இப்படியான உதவிகளைச் செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாது அனுமதிக்கிறார்கள். நான் ஒரு கனடியன், தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்.
நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். முயற்சிதான் வாழ்க்கை. நான் கனடாவுக்குப் போன போது என்னிடம் ஒன்றுமே இருக்வில்லை. எனது முதல் பகுதிநேர வேலை ஒரு உணவகத்தில் சாப்பிட்ட கோப்பைகளைக் கழுவுவது. சந்தர்ப்பங்கள் தானாக வராது. நீங்கள்தான் சந்தர்ப்பங்களைத் தேடிப் போக வேண்டும். கனவுகளோடு வாழுங்கள். உங்கள் வீட்டுக்கு ஒரு கூரை போடுங்கள்.
கனடாவில் இருப்பதால் மட்டும் நான் இந்த நிலைக்கு வந்ததாகச் சொல்ல மாட்டேன். என்னை இங்கே விட்டாலும் நான் வாழ்க்கையில் முன்னேறியிருப்பேன். வருங்கால வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டுச் செய்கிறேன். எங்களுக்கு மனத் தைரியம் வேண்டும். எங்களால் முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும்.
உங்கள் உடல் ஊனத்தைப்பற்றிக் கவலைப் படாதீர்கள். மன ஊனம்தான் கூடாதது. மன ஊனம் என்பதுதான் ஒரு கொடிய நோய். நீங்கள் பழகும் நண்பர்கள் நேர்மறையாக (positive) சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படியில்லாதவர்களிடம் இருந்து ஓதுங்கிப் போய்விடுங்கள். நேர்மறையாகச் சிந்திப்பவர்களோடு உங்கள் நட்பைப் பலப்படுத்துங்கள். அப்படிச் செய்வதுதான் உங்களுக்கும் சமுதாயத்துக்கும் நல்லது.
உங்கள் கனவுகளை விரிபு படுத்துங்கள். உங்கள் மாவட்டத்தில் இருந்து ஒரு சிலர்தான் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்று கவலைப்பட வேண்டாம். நாங்கள் வடக்கு கிழக்கு என்று சிந்திப்பதில்லை. எல்லோரையும் எமது உறவுகளாகப் பார்க்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கனடா வந்த போதுதான் எங்களுக்கு ஒரு தொடர்பு கிடைத்தது. அவருக்கு முன் அண்ணன் யோகேஸ்வரன் கனடா வந்து திரும்பியவர்.
நாங்கள் உங்களுடைய வாழ்க்கையை நிச்சயமாக நிமிர்த்துவோம். நான் தொடர்ந்து நிதி சேகரிக்கும் பணியில் இறங்க இருக்கிறேன். நீங்கள் எங்களுக்கு செய்யக் கூடிய உதவி என்னவென்றால் இப்போது கிடைத்திருக்கும் வாழ்வாதார உதவிகள் மூலம் வரும் வருமானத்தை வைத்து இந்த பதினேழு பேரும் மாதம் ரூபா 50 யை சேமித்து இன்னொரு போராளி அல்லது போராளி குடும்பத்துக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட 17 முன்னாள் போராளிகளுக்கு ரூபா 810,000 (டொலர் 7,000) பெறுமதியான சில்லறைக் கடைக்கான பொருட்கள், குளிர்பானக் கடைக்கான குளிர்சாதனப் பெட்டி, மாடு, ஆடு, தோட்டப் பயிர் செய்கைக்குரிய நீர் இறைக்கும் இயந்திரம் போன்ற வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
(2) புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
அடுத்து செந்தில் குமரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் 10 குடும்பங்களுக்கும் 10 உடல் ஊனமுற்ற 10 முன்னாள் போராளிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா ஊடாக தலைக்கு ரூபா 50,000 நிதியுதவி வழங்கினார்.
முல்லைத்தீவு மாவட்டமானது ஐந்து பிரதேச செயலகங்களை கொண்டது. இவற்றுள் புதுக்குடியிருப்பு பிரதேசமானது 19 கிராம சேவகர் பிரிவுகளை கொண்டு காணப்படுகின்றது. புதுக்குடியிருப்பு பிரதேசமானது இறுதி யுத்தத்தின் போது அதிகமாக பாதிக்கப்பட்ட இடமாகக் காணப்படுவதுடன் அதிகமான முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை கொண்டுள்ள பகுதியாகும்.
யுத்தத்தின் போது மீள முடியாத இழப்புக்களை எதிர்கொண்ட இம்மக்களின் எதிர்கால முன்னேற்றமிகு வாழ்வாதார முயற்சிகளை மேம்படுத்துவதற்கு இவர்களிடம் உள்ள ஒரேயொரு வழியாக சந்தை நோக்கிய விவசாய உற்பத்திகளை மேற்கொண்டு அவற்றைச் சந்தைப்படுத்தி தொடர்ச்சியாக குறிப்பிட்ட தொழில் முயற்சியில் அவர்களை ஈடுபட வைப்பதாகும். இதனூடாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான நிலையான ஓர் தளத்தை உருவாக்கி அவர்களை முன்னேற்ற முடியும்.
குறிப்பாக முன்னாள் போராளிகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தினர் போன்றோர் தமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் தமது அன்றாட தேவைகள் போன்றவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்கு மிகுந்த சிரமத்தின் மத்தியில் தமது எதிர்கால வாழ்வியல் தேவைகளை நினைத்து ஏக்கத்துடன் வாழ்கின்ற சூழ்நிலை காணப்படுகின்றது.
எனவே இவர்களின் வாழ்வாதார மேம்படுத்துவதற்குரிய திட்டத்தை புதுக்குடியிருப்பு பிரதேச மாற்றுத்திறனாளிகளின் அமைப்பான “ஒளிரும் வாழ்வு புதுக்குடியிருப்பு” பொறுப்பேற்று நடாத்துவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு நீர்ப்பாசன உபகரணங்கள் மற்றும் அறுவடை இயந்திர உபகரணங்கள் போன்றவற்றை வழங்கி இத்திட்டம் செயற்படுத்தப்படும்.
இந்த அமைப்பினர் ஏற்கனவே ILO அமைப்பினரின் நிதியுதவியில் 30 பயனாளிகளை கொண்டு விவசாய முயற்சிகளையும் 15 பயனாளிகளை கொண்டு உணவு பொதியிடல் நிலையத்தையும் நடாத்தி வருகின்றனர். செந்தில் குமரன் கொடுத்த நிதியுதவியை வைத்து இவர்கள் மரவள்ளி, பப்பாசி, சுரைக்காய், மிளகாய் போன்ற பயிரினங்களைப் பயிரிடுவார்கள். இவர்களது உற்பத்திகளிற்கு சிறந்த சந்தை வாய்ப்பு சூழல் உருவாக்கிக் கொடுக்கப்படும்.
(3) மருதங்கேணி, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மாவட்டம் மருதங்கேணியில் கணினி கற்றல் நிலையம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் திறந்து வைத்தார். இந்த நிலையத்துக்கு வேண்டிய 10 கணினிகளை செந்தில் குமரன் ரூபா 15,00,000 (டொலர் 13,000) செலவில் வழங்கியிருந்தார்.
அத்தோடு அந்த நிலையத்தை நடத்துவதற்கு வேண்டிய பயிற்சியாளர்களது சம்பளம், வாடகை, மின்கட்டணம் போன்ற செலவுகளை அடுத்த இரண்டு ஆண்டுக்கு மாதம் ரூபா 40,000 வீதம் செந்தில் குமரன் கொடுத்து உதவ முன்வந்துள்ளார். இந்தக் கற்றல் நிலையம் மூலம் அக்கம் பக்கத்தில் உள்ள ஊர்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள், இளைஞிகள் பயனடைய இருக்கிறார்கள். கனடா கணினி கற்கை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கடந்த மே 15 ஆம் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் கணேசலிங்கம் சூரியகாந் தலைமையில் நடைபெற்றது.
சிறப்புற இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கனகேஸ்வரன், கனடா செந்தில்குமரன், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் சு. சுரேன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் க.சூரியகாந் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
இந்த மூன்று வாழ்வாதாரத் திட்டங்களுக்கும் செந்தில் குமரன் நிவாரண அமைப்பின் சார்பாக மொத்தம் ரூபா 33,10,000 இலட்சம் செந்தில் குமரன் வழங்கியுள்ளார்.
இந்த ஆண்டின் முற்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் போரில் ஊனமுற்ற 23 முன்னாள் போராளிகளுக்கு நல்லினப் பசுமாடுகள், கோழிகள், தையல் இயந்திரம் குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் வணிகப் பொருட்கள் உட்பட மொத்தமாக ரூபா 12,00,000 இலட்சம் பெறுமதியான உதவித்திட்டங்கள் அவரால் தொடக்கி வைக்கப்பட்டன.
இலங்கைக்கு இரண்டு வாரப் பயணத்தை மேற்கொண்ட செந்தில் குமரன் மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து நாடு திரும்பியுள்ளார். மிக விரைவில் மீண்டும் அங்கு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
மக்கள் பணியே கடவுள் பணி என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக செந்தில் குமரன் விளங்குகிறார்.