நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மிகமோசமான வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு சிறுமி படுகொலையுடன் தொடர்புடைய மகாலிங்கம் சிவகுமார் நேற்று கொழும்பு வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் அவருக்கு உதவினார் என சட்டக்கல்லூரியின் விரிவுரையாளர் ஒருவரையும் இன்று நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த இருந்தது.
அந்த நேரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றத்தின் பிரதான வீதியை முற்றுகையிட்டு கோசங்களை எழுப்பியதுடன் பொலிஸாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொலிஸாரின் தடைகளையும் உடைத்துக் கொண்டு உள்நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றத்தை கற்கள் , கண்ணாடிப்போத்தல்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினர்.
அத்துடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வாகனம், சட்டத்தரணிகளின் வாகனம் மற்றும் பொலிஸாரின் வாகங்களையும் கற்கள் மற்றும் பொல்லுகள் கொண்டு தாக்கினர்.
இப்போராட்டத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைய வைத்தனர். இருப்பினும் அவர்களை அடக்கமுடியாத நிலையில் சுமார் 2 மணித்தியாலயங்கள் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கல்வீச்சுக்கள் இடம்பெற்றன. அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்ற ஆர்ப்பாட்ட காரர்கள் யாழ். சிறைச்சாலைக்கும் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தி சேதப்படுத்தியுள்ளனர்.
போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர கைதுகளும் இடம்பெற்றன. இதனையடுத்துள்ளது சுமார் 3 மணித்தியாலயங்கள் பதட்டமாக இருந்த நீதிமன்ற சூழல் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. வன்முறையுடன் தொடர்புடைய 127 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள்கள் – 36, துவிச்சக்கர வண்டிகள் -27, முச்சக்கர வண்டி – 02 என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் கைதுகள் இடம்பெறலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் 5 பொலிஸாருக்கும் சட்டத்தரணி ஒருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.