வடபகுதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகையின் போது அவரது உரை தொடர்பிலும் மற்றும் தற்போதைய நிலை தொடர்பிலும் கேட்கப்பட்டபோதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்துக்களை பொறுப்பற்ற கருத்துக்களாகவே எமது மக்கள் பார்க்கின்றனர்.
மிக முக்கியமாக நொந்து போய் அழிவுகளைச் சந்தித்து இருக்கும் நிலையில் மக்கள் இருக்கும் போது காணாமல் போனவர்கள் இறந்து போயிருக்கலாம் என ஒரு நாட்டின் தலைவர் பேசுவது தமிழ் மக்களை பொறுத்தவரையில் நல்லிணக்க அரசின் நம்பிக்கையை இல்லாது செய்துள்ளது.
ஏற்கனவே நம்பிக்கையீனங்களுடன் வாழும் மக்களிடம் இத்தகைய பேச்சு அதீத நம்பிக்கையீனங்களை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக, சம்பூரில் 812 ஏக்கர் விடுவிக்கப்பட்டிருக்கிறது. அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மைத்துனர் கைப்பற்றிய காணியைத் தான் இந்த அரசு விடுவித்திருக்கிறது.
ஆனால் அனல் மின் நிலையத்திற்கான காணிகள் விடுவிக்கப்படவில்லை. மேலும் வலி.வடக்கு, யாழ்ப்பாணத்திலும் இராணுவத்திடம் உள்ள காணிகள் விடுவிக்கப்படுவதற்கான நல்ல செய்திகள் வெளிவரவில்லை. ஏற்கனவே தெல்லிப்பழையில் காணி விடுவிப்பு தொடர்பில் உண்ணாவிரதம் நடைபெற்றவேளை அதில் கலந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க ஆட்சி மாற்றம் பதவி நிலைக்கு வந்தவுடன் இவற்றை விடுவிப்போம் என்று சொல்பவர்கள் தற்போது காலத்தை இழுத்தடிப்பதும் அல்லது அதற்கான காரணத்தை கூறுவதும் வாடிக்கையாகி தமிழ் மக்களை அகதி வாழ்க்கைக்கு வைத்திருப்பதையே விரும்புகிற நிலையைத்தான் தோற்றுவிக்கிறது. அதேநேரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல்போனோர் கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவிற்கும் இத்தகைய நிலை வந்தால் தான் இவர்களுக்கு காணாமல் போனவர்கள் நிலை புரியும் என்று கூறியவர்கள் இதற்கு நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியவர்கள் நாங்கள் இந்த விடயத்தில் தீர்வைக் காணுவோம் எனக் கூறியவர்கள் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனவர்கள் இறந்து போயிருப்பார்கள் எனக் கூறுகின்றார். ஆகையால் காணாமல் போனவர்கள் எவ்வாறு இருந்தார்கள். அவர்களை யார் வைத்திருந்தார்கள். எத்தனை பேர் வைத்திருந்தார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
ஒரு நாட்டின் தலைவர் பொறுப்பான முறையில் ஒரு இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு தொடர்பாக இப்பொழுதும் எள்ளிநகையாடுவது போன்று எதேச்சாதிகார முறையில் வார்த்தைகளைக் கொட்டுவது தொடர்ந்து 60 ஆண்டு கால இலங்கை அரசியலில் பௌத்த – சிங்கள சிந்தனைகளோடு அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட வார்த்தைகளையே பிரதமர் சொல்வதைப் போல் உள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடுவோருக்கு கணவன், மனைவி, பிள்ளைகளை ஒப்படைத்தவர்கள் குடும்பங்களுடன் சரணடைந்தவர்கள் தொடர்பில் யார் பதில் கூறுவது. குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் சரணடைந்ததற்கு பல ஆதாரங்கள் இருக்கும் நிலையில் தற்போதும் இக்குடும்பங்கள் தமது ஆதாரத்தோடு கண்ணீருடனும் வாழ்கிறார்கள். இவர்களுக்கு பிரதமர் பதில் சொல்லவேண்டும்.
ஜனாதிபதியும் பிரதமரும் சம ஆளுமைக்குள் தங்களுக்குள் இருக்கக்கூடிய அரசியல் போட்டிகளை மையப்படுத்திக் கொண்டு தீர்வை நோக்கிய பயணத்தில் இழுத்தடிப்புக்களையும் தவறான வார்த்தைப்பிரயோகத்தையும் வெளிப்படுத்துவது அரசின் மீது இன்னும் இன்னும் வெறுப்பை வெளிக்காட்டுகின்றது என்றார்.