மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முனைக்காடு கிழக்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பெரும் பாதிப்பை எதிர்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கு லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் 4000 ஸ்ரேலிங் பவுண் நிதி உதவி மூலம் அவசர நிவாரண உதவியை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக மேற்கொண்டது.
இதன்போது முனைக்காடு கிழக்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 423 குடும்பங்களில் 172 குடும்பங்களுக்கு அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு, சோயாமீற், தேயிலை அடங்கிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு மற்றையவர்களுக்கு விரைவில் வழங்கி வைக்கப்படவுள்ளது.
இவ்உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேரவையின் அனர்த்த சேவை பிரிவு பொறுப்பாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன், பேரவையின் பொருளாளர் ந.புவனசுந்தரம் மற்றும் பேரவை பிரிதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கல்வி, சமூக பணிகளை ஆற்றிவருவதோடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கும் புதவி புரிந்த லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய நிருவாகத்திற்கும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினருக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.