குமுதினி
நீரிலே ஒரு தீ!
நீந்திவந்தாய் எம்
உடல்கள்தாங்கி
நீ எங்கள் குமுதினி…
பாரிலே நிகழ்ந்த
துயர், பதறியதெங்கள் உயிர்
படகிலே எம்மக்கள்
பட்ட துயர்க்குச் சாட்சியம் நீ!
சீரிலே வாழ்ந்த தமிழ்
சின்னாபின்னமாய்ச்
சிரசறந்து விட்ட ஓலம்
காற்றிலே மீண்டு வந்து
கனலாய்க் கொண்டு வந்தாய் நீ!
ஊரிலே எம்மக்கள் தம்
உறவுகள் தொலைத்த கதை- அவர்
காதிலே சேதி சொல்ல
கடலிலே மீண்டு வந்த
கடற்கன்னி நீ!
போரிலே மடிந்த வாழ்வு
பொய்மையில் போய்விடாமல்
நேரிடை நீதிக்கு நித்தியச் சாட்சி நீ!
புத்தனின் பிள்ளைகளால் செத்துப்போன என் சொந்தம் நினைத்து எத்தனை படுகொலைகளை கத்தியழ முடியாமல் நித்தமும் நான் பாட…
-காந்தள்-