சிங்க லே அமைப்பு தொடர்பில் அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. நீதியையும் நியாயத்தையும் மறைப்பதற்கு முயற்சித்தவர்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை கண்டிருக்கின்றோம். அனைவரும் ஒன்றுபட்டு எமது வரலாற்று ரீதியான பண்பாடு, கலாசாரம் என்பனவற்றை பாதுகாப்பதோடு சிறந்த எதிர்காலத்திற்காக செயற்படவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஐக்கிய ஊழியர் தொழிற்சங்கத்தின் அங்குராட்பண வைபவம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருசலாமில் நேற்று நடைபெற்றது.
இதில் தலைமையுரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரபினால் தேசிய ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது. அந்த அரசியல் கட்சியின் தேவைக்காகவே இவ்வாறான தொழிற்சங்கமொன்று உருவாக்கப்படவேண்டுமென 1999ஆம் ஆண்டு முனைப்புக்களைச் செய்திருந்தோம். காரணம் எமது கட்சியை எடுத்துக்கொண்டால் இனவாதக்கட்சியென்று குற்றம் சாட்டுகின்றார்கள். ஆகவே எமது கட்சியின் யதார்த்தத்தை வெ ளிப்படுத்துவதற்காக இவ்வாறானதொரு தொழிற்சங்கம் உருவாக்கப்படவேண்டுமென தீர்மானித்தோம். 16ஆண்டுகளின் பின்னர் அந்தக் கனவு நனவாகியிருக்கின்றது.
இந்த நாட்டில் அரசியல் கட்சிகள் உருவாகுவதற்கு முன்னதாக தொழிற்சங்கள் ஊடாகவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆசிய பிராந்தியத்தில் 1931ஆண்டு ஜனநாயகத்தின் உயர்ந்த பண்பான தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட முதன்மை மிக்க நாடாக எமது நாடு உள்ளது. படிப்படியாக எமது நாட்டில் ஜனநாயகம் கட்டியெழுப்பட்டது. அதற்கு தொழிற்சங்கள் பேருதவியாக இருந்துள்ளன.
அவ்வாறான தொழிற்சங்களுக்கு தலைமை வழங்கிய தலைவர்கள் தொடர்பில் நீண்ட பட்டியலொன்றே காணப்படுகின்றது. விசேடமாக பாலா தம்பு, கொல்வின் ஆர் டி சில்வா போன்ற நிபுணத்துவம் வாய்தவர்கள் உள்ளார்கள். சிறந்த சட்டத்தரணிகள். இவ்வாறானவர்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி என்றுமே பதவிகளைப் பெற்றிருக்கவில்லை.
ஜனாதிபதி சட்டத்தரணி என்ற பதவியானது சட்டத்தரணியொருவருக்கு கிடைக்க கூடிய அதியுச்ச பதவியாகும். ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது இவர்களை அந்தப்பதவிக்கான கோரிக்கையை முன்வைக்குமாறு பலதரப்புக்களால் தூதனுப்பட்டபோதும் அவர்கள் அதனைப்பெற்றிருக்கவே இல்லை. அவ்வாறு தொழிற்சங்கங்கங்களும், தலைவர்களும் இருந்தபோதும் காலக்கிரமத்தில் தொழிற்சங்கங்கள் அரசியலுக்குள் அடிபணிந்து விட்டன. அரசியல் கட்சிகளின் ஒரு பகுதியாக மாறியுள்ளன.
தேர்தல் காலங்களில் கோரிக்கைளை ஏற்றுக்கொள்வதாகவும் நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதிகள் வழங்கப்படும். தேர்தல் நிறைவடைந்த பின்னர் அதன் பிரதிநிதிகள் அமைச்சர்களை பார்ப்பதற்கான நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள். இவ்வாறான கலாசாரத்தினுள் இருக்கும் நாம் எமது தொழிற்சங்கத்திற்கும் அவ்வாறான நிலைமையொன்று ஏற்படக்கூடாதென பிரார்த்திக்கவேண்டும். அந்த வகையில் இவ்வாறான தொழிற்சங்கத்தின் தலைமையை நான் சவால்களுக்கு மத்தியில் பொறுப்பேற்கின்றேன்.
சிங்க லே
உயர் பண்பாடுகள், கலாசாரங்கள் தொடர்பாக பேசும் நாம் மூறு தசாப்த யுத்தம் நிறைவடைந்த சூழலில் இருக்கின்றோம். யுத்தம் நிறைவடைந்தவுடன் அடுத்தநொடியே அடுத்த காரணத்தை தேடும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. அவ்வாறானவொரு சமுகமாக சர்வதேசத்திற்கு நாம் அடையாளம் காட்டப்பட்டோம். அதன் காரணத்தாலேயே இவ்வளவு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போது சிங்க லே போன்றவை மேலெழுந்துள்ளன. அது தொடர்பான நான் வாய்திறக்கவேயில்லை. நான் வாய் திறந்தால் அது மேலும் உக்கிரமடையும் ஆபத்துள்ளது. ஆகவே நான் அது தொடர்பில் கதைப்பதேயில்லை. இருப்பினும் இவ்வாறான செயற்பாடொன்றை நாமும் ஆரம்பிப்போமென நகைச்சுவையாக நினைப்பதுண்டு. நாங்களும் சிங்க லே என சிவப்புக்கு பதிலாக பச்சை நிறத்தைப் பொறித்துச் செல்வோமென கருதுவதுண்டு.
சிங்கள மொழியில் லே என்பது இரத்தம். மனிதர்கள் அனைவருக்குமே ஒரே நிறத்திலேயே இரத்தமுள்ளது. அதனை உணராது இன்று சில அமைப்புக்கள் இவ்வாறான விடயத்தை கையிலெடுத்துள்ளன. நாட்டில் இவ்வாறு உருவாகியுள்ள புதிய அமைப்புக்கள் அரசியல் அச்சத்தை உருவாக்குவதறகு முயற்சிக்கின்றன. அவ்வாறான ஒரு முயற்சிதான் இதுவாகும்.
பொலிஸ் பிரிவின் நிலைமை
நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பைக் கொண்டிருக்கின்ற பொலிஸ் பிரிவின் நிலைமை மோசமடைந்திருக்கின்றது. எம்பிலிப்பிட்டிய சம்பவம் அதனை வெ ளிப்படுத்தியிருக்கின்றது. நாம் பொலிஸாரை குற்றம் சாட்ட முடியாது. காரணம் யுத்த காலத்தில் பொலிஸார் பயன்படுத்தப்பட்ட முறைமையானது மாறுபட்டிருக்கின்றது.
அதனால் அவர்கள் எந்தவிதமான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். எதனைச் செய்யவேண்டுமென்பதை மறந்துவிட்டார்கள். குழப்பத்தில் உள்ளார்கள். பொலிஸாருக்கு சட்டத்தை நிலைநாட்டுவதற்கும், சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்குமான பொறுப்பு உள்ளது. இவ்வாறான இரண்டு விடயங்களால் அவர்கள் குழப்பமடைந்து எதனைச் செய்வதென அறியாதுள்ளார்கள்.
யுத்தகாலத்தில் விசாரணைகளை குறைத்தார்கள். அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை அதற்கு ஏதுவாகவிருந்தது. ஆகவே புதிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கு இணங்க நாம் அனைவரையும் புதியதாக உருவாக்கவேண்டியுள்ளது. பொலிஸ் பிரிவையும் புதிய சிந்தனைக்குள் உள்வாங்கவேண்டியுள்ளது.
கிறீஸ் பூதம்
கடந்த ஆட்சிக் காலத்தில் கிறீஸ் பூதம் பிரச்சினை எழுந்தது. இன்றுவரையில் அதன் பின்னணி என்ன யார் தொடர்புடையவர்கள் என்பது கண்டறியப்படவில்லை. மக்களிடையே பாரிய குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. கிறீஸ் பூதத்தினால் பொலிஸாரின் 30இற்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரைக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளிலேயே நடைபெற்றுள்ளன. அதுவும் விநோதமானது. அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளின் செயற்பாடுகள் என்றே காரணம் கூறப்பட்டது. பொதுமக்கள் பொலிஸாரின் வாகனத்திற்கு தீவைக்குமளவிற்கு நிலை சென்றிருக்கின்றதென்றால் இவ்விடயம் சாதாரணமானதொன்றல்ல. ஆனால் இன்றுவரையில் எதுவுமே தெரியாதுள்ளது.
கலைஞர்கள்
கலைஞர்களை பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமது கட்களினுள் உள்வாங்குதற்கு முனைப்புக்களை மேற்கொண்டன. அவை முடியாத பட்சத்தில் பழிவாங்கல்களை மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் வருமானமீட்டும் வாய்ப்புக்கள் தடைசெய்யப்பட்டன. ஆனால் அவர்களின் திறமையும் பிரபல்யமும் குறைவடையவில்லை. அவர்களின் வருமானம் தடைசெய்யப்பட்டுவிட்டதென அரசியல் கட்சிகள் கருதியபோதும் முழு அரசாங்கமே ஆட்சியை விட்டகலவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.
புதிய இலக்கு
அவ்வாறான யுகமொன்றிலிருந்து விடுபட்டு வந்திருக்கின்றோம். ஜனாதிபதி, பிரதமர் அத்தகைய நிலைமை ஏறபடாதென்பதை உறுதி செய்திருக்கின்றார்கள். புதிய இலக்குடன் பயணிப்பதற்கான சுதந்திரமான சூழலொன்றை ஏற்படுத்தவே தயாராகவிருக்கின்றோம். அது இலகுவான விடயமல்ல. தகவல் அறியும் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அச்சட்டமூலம் நடைமுறைக்கு வருமானால் ஊழல்மோசடிகள், குற்றங்கள் தொடர்பில் மேலும் பல விடயங்கள் பகிரங்கமாகும்.
எமது கலாசாரம், பண்பாடு,வரலாற்று முக்கியத்துவமான விடயங்கள், புதிதாக மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் அனைத்தையும் விடுத்து லே சம்பந்தமாக பேசும் நிலைமைக்கு வந்திருக்கின்றோம். இரத்தம் என்ன நிறம் என்பதை ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலம் வெ ளிப்படுத்தும் நிலைமையில் இருக்கின்றோம். இந்தச்செயற்பாட்டில் என்ன இலாபம் அடையப்போகின்றார்கள் எனத் தெரியவில்லை. இவ்வாறான செயற்பாடுகளால் எந்தப்பயனும் அடையப்போவதில்லை. ஆகவே இது தொடர்பாக அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.
இவ்வாறான செயற்பாடுகளால் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள். அவ்வாறு அச்சத்தை ஏற்படுத்தி எம்மை தொடர்ந்தும் அடிபணி வைக்க முடியாது. இந்த நாட்டில் நீதி நியாயத்தை மூடி மறைத்தவர்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் உள்ளன. தொடர்ந்தும் அவ்வாறு செயற்படுகின்றமையால் எம்மை அடிபணிய வைக்கமுடியுமெனக் கருதுபவர்கள் இருக்கின்றார்கள். ஆகவே தேசிய நல்லிணக்கம் தொடர்பாக வெறுமனே வார்தையால் பேசிக்கொண்டிருக்காது செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்கவேண்டும் என்றார்.