தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக ஒருமித்து இருந்தால் மாத்திரமே அதிகாரப் பகிர்வின் முழுமையான பெறுமதியை நாங்கள் பெற முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
மண்டூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணையைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாங்கள் தற்பொது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். பாராளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் நோக்கில் 21பேரடங்கிய வழிநடத்துக் குழு நிர்ணயிக்கப்பட்டு அதனுடைய முதல் அமர்வு இடம் பெற்று இம் மாதம் 28ஆம் திகதி மறுபடி வழி நடத்துக்குழு கூட இருக்கிறது.
அதிகாரப்பகிர்வு என்பது கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் கடந்த 35 வருடங்களாக பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறோம். பிரேமதாச காலத்தில், சந்திரிகா காலத்தில், ரணில் காலத்தில், மகிந்த காலத்தில் என பல்வேறு பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது. சர்வ கட்சிக் குழுக்கள் உள்ளிட்ட குழுக்களிடமும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
அரசியல் சாசன குழ என்பது பல்வேறு நிபுணர்களுடைய கருத்துக்களை வைத்துக் கொள்ளலாம். இது போன்ற நிலையில் மக்களுடைய கருத்துக்களை அறியும் வகைனயில் மக்களைச் சந்தித்து மக்களது கருத்துக்களைக் கேட்டறிந்து தங்களுடைய அறிக்கையை இந்த மாதம் முடிவதற்கு முன் அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும்.
கடந்த கால தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட பிரிக்கப்படாத ஒற்றுமையான இலங்கை நாட்டுக்குள் முழுமையான விசுவாசமான இறைமையின் அடிப்படையில் அளிக்கப்படுகின்ற அதிகாரப் பகிர்வின் ஊடாக, வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுடைய பிறப்புரிமை உறுதி செய்யப்பட்டு, சமத்துவமான சமாதானமாக வாழக்குடிய அடிப்படையை எமது மக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஏற்படுகின்ற தீர்வு, உறுதியான, நிலை நிற்கக் கூடிய அரசியல் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். அதனை முன்வைத்துத்தான் நாமும் பயணத்துக் கொண்டிருக்கிறோம்.
அந்தத் தீர்வு விரையில் ஏற்பாட வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு, விசேடமாக தமிழ் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒற்றுமையாக நிற்கவேண்டியது அவசியம். எங்களுடைய பலம் ஒற்றுமையில் தான் தங்கியிருக்கிறது. அதே விதமாக முஸ்லிம் மக்களிடம் கேட்டுக் கொள்வது நீங்களும் ஒற்றுமையாக, ஒருமித்து நிற்க வேண்டும். உங்களுடைய பலமும் அதில் தான் இருக்கிறது என்பதேயாகும் .
செல்வா டட்லி ஒப்பந்தமும். பண்டா செல்வா ஒப்பந்தமும் தமிழ் மக்களுக்காக மட்டும் செய்யவில்லை, தமிழ்பேசும் மக்களுக்காகச் செய்தார்கள். 87இல் ரஜீவ் காந்தியுடன் ஜெயவர்த்தனாவால் செய்யப்பட்ட ஒப்பந்தத்திலும் தமிழ் பேசும் மக்கள் என்றுதான் செய்தார்கள் என்றார். .