அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் மேற்கொண்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஜந்தாவது நாளாக நீடிக்கின்ற நிலையில் அவர்கள் உடல் சோர்விற்கு உள்ளாகியுள்ளனர். திட்டமிட்ட வகையில் சிங்கள கைதிகளுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஜெயராஜ் அன்ரன் சாம்சன், ராகவன் சுரேஸ் மற்றும் கோபாலகிருஸ்ணன் கோபி ஆகிய மூன்று அரசியல் கைதிகளே உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். தம்மை தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவிற்கு மாற்றக் கோரியே அவர் இப்போராட்டத்தினில் குதித்துள்ளனர்.
தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிங்கள தண்டனை கைதிகள் பகுதியில் தொடர்ச்சியான சித்திரவதைகளை எதிர்கொண்டிருப்பதாகவும் தமது உணவினைக் கூட அவர்கள் பறித்துச் சாப்பிட்டு விடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே குறித்த மூவரையும் பார்வையிட குடும்பத்தவர்களிற்கு அனுமதி மறுத்து வரும் சிறைச்சாலை அதிகாரிகள் உண்ணாவிரதம் இருந்து அவர்கள் மரணித்தால் சடலங்களை அனுராதபுரம் வைத்தியசாலையில் ஒப்படைப்பதாகவும் அங்கு சென்று பார்வையிட ஆலோசனை கூறியதாகவும் கைதிகளது பெற்றோர் தெரிவித்தனர். எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாது இவர்கள் மூவரும் கடந்த ஆறு வருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.