வன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள் படுகொலைகளும் போராளிகளின் வீரச்சாவும் அன்று நடந்தேறிக்கொண்டிருந்தன. இவை தமிழ் மண்ணின் வரலாறுகளாக அன்று காணப்பட்டன.
அதன் நினைவுகளை மீட்டிப்பார்க வேண்டிய தேவை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒர் கடமை. அந்தவகையில்தான் கிளிநொச்சியினை விட்டு பின்னகர்ந்த மக்களும் விடுதலைப்புலிகளும் இறுதியான தாக்குதல்களை எதிரிமேல் தொடுத்தவண்ணம் எதிரிக்கு பாரிய இழப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டார்கள்.
அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப்பகுதியில் இடை மறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.
ஆக்கிரமிப்பாளர்களின் அரக்கத்தனமான கொடும் யுத்தத்தை மனோபலத்துடன் எதிர் கொண்டார்கள் விடுதலைப்புலிகள். யுத்தகளங்களில் பயன்படுத்த, தடை செய்யப்பட்ட பல விதமான ஆயுதங்களாலும், போர் விமானங்களாலும், ஆட்லெறிகளாலும் பரவலாகத் துடைத்தெறிந்து முன்னேறியது சிங்கள இராணுவம். விடுதலை அல்லது வீரச்சாவு என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தபடி ஒவ்வொரு போராளிகளும்,பொறுப்பாளர்களும், தளபதிகளும் அக்களத்தில் சாதனை படைத்தனர். பல நூற்றுக்கணக்கான இராணுவத்தைக் கொன்று குவித்தனர். உண்ண உணவு இல்லை, குடிக்க தண்ணீர் கூட இல்லை அனைத்து உதவிகளும் தடை செய்யப்பட்ட நிலையில் தமக்கேற்பட்ட சோர்வைக் கூட மறந்த நிலையில் தம்மிடம் இருந்த வளங்களை வைத்து சாவின் உச்சகட்டத்தில் கூட தர்மயுத்தம் நடத்தினார்கள். அக்களத்தில் போரிட்ட ஒவ்வொரு வீரர்களுடைய அழிக்க முடியாத வரலாறுகளும் அவர்களுடைய செங்குருதிகளால் அந்த மண்ணில் பதியப்பட்டது .
ஆனந்தபுரம் மண்ணில் எமது தேசியத்தலைமையினை பாதுகாத்து மாவீரர்களான போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், பிரிகேடியர்களை நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.
இந்நிலையில் அன்று சிறீலங்காப்படையினரின் கொத்துக்குண்டு, நச்சுக்குண்டு, இரசாயன குண்டு மழைக்குள் நின்று களமாடி மாவீரர்களான வீரர்களையும் அன்றைய காலகட்டபகுதியில் உயிர்நீத்த பொதுமக்களையும் நினைவிற்கொண்டு இம்மாவீரர்களின் ஈகைக்களுக்கு மதிப்பளித்து தொடர்ந்தும் ஈழவிடுதலை பணியினை மேற்கொள்வோம்.