ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம், ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து வந்த ஈராக் நகரங்கள் அத்தனையும் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டதாக அந் நாட்டின் பிரதமர் ஹைதர் அல்அபாதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நினிவே மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
குறித்த தேடுதலின்போது அபு மரியா கிராமத்தில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகளும், மொசூல் பகுதியில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் பெண் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சமீபத்தில் மேற்கு மொசூல் நகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 20 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.