வீட்டுப் பணிப் பெண்ணைத் தான், தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு தனக்கு எதிராக, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் மேற்கொண்ட தீர்மானம், சட்டத்துக்கு முரணானது என்றும் அது தன்னுடைய அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும் எனவும் மனுதாரரான உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் அப்றூ குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான விசாரணைகள் இன்றி சட்டமா அதிபரால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறித்த குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த வேளை, சட்டமா அதிபர், நீதி கட்டமைப்புக்குள்ளேயே செயற்பட்டதாகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர், சட்டத்தை மீறவில்லை எனவும் கூறியுள்ள உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, பெண்ணொருவரைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூ, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், இன்று செவ்வாய்க்கிழமை, ஆஜராகவிருக்கின்றார்.
இவர், நீதியரசர் பதவியிலிருந்து கடந்த 2ஆம் திகதி ஓய்வுபெற்றுள்ளதாகவும், தனது இளைப்பாறும் கடிதத்தை, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கல்கிஸையிலுள்ள தனது வீட்டில் வைத்து, 2015ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி, தன் வீட்டுப் பணிப்பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று, அவருக்கெதிராகக் குற்றஞ்சாட்டி, சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவருக்கெதிராக, இலங்கை வரலாற்றில் வழக்கொன்று விசாரணைக்கு உட்படுத்தப்படுவது, இதுவே முதற்தடவையாகும்.