கரவெட்டி – இராஜகிராமத்தில் கரவெட்டிச்சுடர் விளையாட்டுக்கழகம் நடத்திய மே தினக் கூட்டமும் பரிசளிப்பு விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவன் அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் விடயத்தில் இந்தியா மிக அக்கறையோடு செயற்படுகிறது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய முடியாது. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் வாழ்வாதார உதவிகள் போன்றவற்றை இந்தியாவே பெற்றுத்தரும். இந்தியாவின் வாழ்வாதார உதவிகளால் எம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். அரசியல் தீர்வானாலும் சரி, வாழ்க்கைத்தர உதவிகளானாலும் சரி இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் எதுவும் செய்யாது. அப்படி அந்த நாடுகள் செய்யுமேயானால் அது இந்தியாவுக்கு ஊடாகவே செய்யவேண்டும்.
இக் கிராமத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான இரு மாணவர்களுக்கு சிவன் அறக்கட்டளை நிதியம் உதவிகளை இந் நிகழ்வில் வைத்து வழங்கியுள்ளது. இம் மாணவர்களின் பெற்றோர்கள் பாராட்டப்பட்ட வேண்டியவர்கள். அன்றாடம் உழைத்தால்தான் அடுப்புகள் எரியும் என்ற நிலையில் கஷ்டப்பட்டு பிள்ளைகளுக்கு கல்வியை ஊட்டி அவர்களை உருவாக்கியுள்ளார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை கல்வி கற்கத் தூண்டவேண்டும். அவர்கள் சீரான கல்வியைப் பெற பெற்றோர்கள் இடைவிடாத முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். இம்முயற்சிகளுக்கு சிவன் அறக்கட்டளை நிதியம் போதிய உதவிகளை வழங்கும். பெற்றோர்கள் வயோதிபத்தை அடையும் வேளை எந்தவொரு பிள்ளையும் யாரிடமும் கையேந்தக்கூடாத நிலை உருவாக வேண்டும். அதனை உணர்ந்து பெற்றோர்கள் பிள்ளைகளைக் கல்வியில் உயர்த்தவேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேமதாஸவினால் மாதிரிக் கிராமத்திட்டத்தின் கீழ் இக் கிராம மக்களுக்கு வீடுகள் கட்டி வழங்கப்பட்டன. அவ் வீடுகள் பழுதடைந்துள்ளன. மழைக்காலங்களில் மழைநீர் ஒழுக்கேற்பட்டுள்ளது. இவ் வீடுகளின் தற்போதைய நிலையை பார்க்கின்றபோது. மிகவும் மனவேதனை தருகிறது. இந்த வீட்டுத்திட்டத்திற்கு இந்தியத் தூதுவர் உதவவேண்டும். இதேவேளை வீட்டுத்திட்ட அமைச்சராக பிரேமதாஸவின் மகன் சஜித் பதவி வகிக்கிறார். அவரை நான் சந்தித்து இவ் வீட்டுத் திட்டத்தை மறுசீரமைக்க கோரவுள்ளேன் எனத்தெரிவித்தார்.
இதனையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட யாழ். இந்தியத் தூதுவர் ஆர்.நடராஜன் உரையாற்றுகையில்,
பொருளாதார வசதி குறைந்த மக்கள் நிறைந்த கிராமத்திற்கு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இக் கிராமத்தின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்துள்ளேன். இக் கிராமத்துப் பிள்ளைகளுக்கு கல்வி அவசியமானது. இன்றைய சந்ததிக்கு நல்ல கல்வியறிவையூட்டி எதிர்காலத்தில் இக்கிராமத்தில் அறியாமை என்ற வார்த்தை இருக்கக்கூடாது. அதற்கேற்ற மாதிரி கல்வியறிவு முன்னேற்றம் அடையவேண்டும் எனத் தெரிவித்தார். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்த இராஜகிராமம் அப்போது போலவே இப்போதும் இருந்து வருகிறது.
இக் கிராமத்தை அபிவிருத்தி செய்து. சிறார்களுக்கு நல்ல கல்வியறிவை வழங்கி அவர்களை உயர்த்துவதே எனது நோக்கம் என தெரிவித்த சிவன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கணேஸ்வரன் வேலாயுதம், அதற்கான வேலையை இந்தக் கிராமத்தில் ஆரம்பித்துள்ளேன். எதிர்வரும் நான்கு வருடகாலத்தில் கிராம மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி இக் கிராமத்தை மாற்றிக்காட்டுவதற்கு திட சங்கற்பம் பூண்டுள்ளேன் என்றார்.