தற்போது ஏற்பட்டுள்ள பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிடக்கூடாது.
முஸ்லிம்களையும் அரவணைத்துக்கொண்டு சிங்கள மக்களை பகைத்துக்கொள்ளாது நீடி த்த நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள
வேண்டும். எமது மக்கள் ஏற்காத எதனையும் நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லையென்பது உறுதியானதெனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் விடேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. காலை 10.30இக்கு ஆரம்பமான இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர்கள், வடக்கு கிழக்கை பிரதிநிதிதித்துப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
புதிய அரசியல் அமைப்பு தயாரிப்பதற்காக பாராளுமன்றத்தை அரசியல் அமைப்பு பேரவையாக செயற்படுவதற்கான சட்டமூலத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள நிலையில் அரசியல் தீர்வு, கூட்டமைப்பினுள் காணப்படும் முரண்பாடுகள், பொதுமக்களின் பிரச்சினைகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள், அரசியலமைப்பில் கூட்டமைப்பின் பங்குபணிகள் உட்பட பல விடயங்கள் நீண்ட நேரமாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் தலைமையுரையாற்றுகையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது,
நாம் புதிய நிலைமையில் இங்கு கூடியிருக்கின்றோம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுள் சில முரண்பாடுகள் காணப்படுகின்றமையை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஜனநாயக கட்டமைப்பொன்றில் அவ்வாறான முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் அதனை பெரிதுபடுத்தவேண்டிய அவசியமில்லை.
எமது மக்கள் நீண்டகாலமாக பிரச்சினைக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். பாதிக்கப்பட்ட அவர்களுக்கு பரிகாரம் வழங்கப்படவேண்டும். அதேநேரம் எமது மக்கள் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழுவதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டும். அவ்வாறானதொரு சூழல் உருவாக்கப்படுவதாயின் இங்கு புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிடித்து நிலைத்திருக்ககூடிய நிரந்தரமான தீர்வு காணப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
இனப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என்பதை நாம் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனான ஒவ்வொரு சந்திப்புகளின் போதும் வலியுறுத்தி வருகின்றோம். அதில் தொடர்ச்சியாக உறுதியுடனும் இருக்கின்றோம்.
நான் ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறுகின்றார்கள். கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். அவை நிராகரிக்கப்படவேண்டியவை. நான் ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை.
எமது மக்கள் தமது பூர்வீக மண்ணில் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும். அவர்களின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்பட்டதாக அமையவேண்டும். வடக்கு கிழக்கு எமது மக்களின் பூர்வீக தாயகமாகும். தற்போது உயர் நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பினால் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படவேண்டும். மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் அதியுச்ச சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
எமது மக்கள் எமக்கு ஆணை வழங்கியிருக்கின்றார்கள். அவர்கள் ஏற்றுக்கொள்ளாத எதனையும் நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவர்களின் அனுமதியுடனேயே நாம் எவ்விதமான விடயங்களையும் ஏற்றுக்கொள்வோம். தற்போதைய சூழலில் எமது பிரச்சினை சர்வதேச ரீதியில் முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த நாட்டில் கடந்த காலத்தில் ஒரு சர்வாதிகார போக்குடைய ஆட்சி முன்னெடுக்கப்பட்டிருந்து. எமது மக்களின் பங்களிப்புடன் ஜனவரி எட்டாம் திகதி புதிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக காணப்படுகின்றார். தென்னிலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளும் கூட்டாக இணைந்து ஆட்சியை முன்னெடுக்கின்றன. தேசிய அரசாங்கமொன்ற உருவாக்கப்பட்டுள்ளது.
ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள புதிய சூழலில் நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படுவது அவசியமானதாகும். அவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டியதும் முக்கியமானதாகும். அவ்வாறில்லாதுவிடின் அந்த ஆட்சியை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்லமுடியாது.
இவ்வாறான சூழலில் புதிய அரசாங்கம் சில முற்போக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. விசேடமாக புதிய அரசியல் அமைப்பை உருவாக்குதல், நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகள், பொதுமக்களின் அன்றாடப்பிரச்சினைகளுக்கு தீர்வகளை வழங்குதல், பொறுப்புக்கூறுதல் போன்ற விடயங்களில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதை அவதானிக்க கூடியதாகவிருக்கின்றது.
தென்னிலங்கையில் புதிய அரசியல் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தை நாம் ஒருபோதும் நழுவிடக்கூடாது. நாம் முஸ்லிம் மக்களை அரவணைக்கவேண்டும். அவர்களுடன் இணைந்தே தீர்வு தொடர்பான இறுதி முடிவை எட்டவேண்டும். அதேநேரம் சிங்கள மக்களையும் பகைக்ககூடாது. அவர்கள் அச்சமடையும் வகையிலான காரசாரமான கருத்துக்களை முன்வைக்க கூடாது. அனைவரும் இத்தருணத்தில் ஒற்றுமையாக இருக்கவேண்டும். எமது மக்களின் துன்ப துயரங்கள் நீங்கிய புதிய எதிர்காலத்திற்கான ஒன்றுபட்டு செயற்படவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்றார்.