வடக்கு மக்களின் காணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில், நடந்த காணி அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். தெற்கிலிருந்து செல்லும் சிலர் வடக்கில் எங்களது காணிகளை கைப்பற்றிக் கொள்கின்றனர். சில உயர் அதிகாரிகளிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டு வடக்கிற்குச் செல்பவர்கள் இவ்வாறு காணிகளை பெற்றுக்கொள்கின்றனர்.
மேலிடத்திலிருந்து வரும் பட்டியலுக்கு அமையவே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இடம்பெயர்ந்து வாழும் அனைத்து மக்களும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும். காணி அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டியது அவசியமானது எனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.