கிளிநொச்சி மாவட்டம் பரந்தனில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டமையை அடுத்து இது போன்ற சம்பவங்கள் மேலும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக பொலிசார், ஊர்மக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் அடங்கிய விழிப்புக்குழு ஒன்றும், கல்விக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
பரந்தன் பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் பாடசாலைக்கு சென்ற வேளையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் கிளிநொச்சி பொலிசார் அதே இடத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றில் தடுத்து வைத்துள்ளனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து கடந்த 28ம் திகதி ஊர்மக்களும், சிறுமியின் உறவினர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலம் குறித்து இந்நடவடிக்கை கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்துக்கு பின்னர் எவ்வித அசப்பாவிதங்களும் இடம்பெறாது கிராமத்தைப் பாதுகாக்கும் நோக்கோடு பரந்தன், சிவபுரம் பகுதியிலுள்ள பதினோரு குறுக்குத் தெருக்களிலும் இருந்து ஒருவர் வீதம் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுடன் கிளிநொச்சி பொலிசார் கரைச்சி பிரதேச சபை உபதவிசாளர் ஆகியோரையும் இணைத்து பதினைந்து பேர் கொண்ட விழிப்புக்குழு ஒன்றும், பாடசாலை செல்லாத மாணவர்களை கண்டறிந்து பாடசாலையில் சேர்ப்பதற்காக 05 பேர் கொண்ட கல்விக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, கரைச்சி பிரதேச சபை உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன், கண்டாவளைப்பிரதேச சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரி திருமதி.சுரேஸ் பரந்தன் கிராம அலுவலர் திரு.சந்திரன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் கஜேந்திர மூர்த்தி, மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய இணைப்பாளர் சுகந்தினி, நரோ நிறுவன வெளிக்கள உத்தியோகத்தர் விவேகி, பிரஜைகள் குழு உபசெயலாளர் விக்ரர் யோகநாதன். கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர், சிறகுகள் பெண்கள் அமைப்பினர், பொலிஸ்பொறுப்பதிகாரி பிரியந்த, உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி குணரோஜன், பொலிஸ் உத்தியோகத்தர் வினோ, கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.