நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைலாகு கொடுத்து கலந்துரையாடினார். தேநீர் விருந்தில், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்டோர், ஒரே மேசையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தனின் தோளில் கை போட்டபடியே மாவை சேனாதிராசாவுக்கு கைலாகு கொடுத்தார். பின்னர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு எம்.பிக்களுடன் அவர் சம்பிரதாயபூர்வமாக உரையாடிவிட்டுச் சென்றார்.
அதேவேளை, வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி அளித்த தேநீர் விருந்துபசாரத்தில், ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.