சர்வதேச பகல்-இரவு முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அடிலெஸ்டில் நடந்தது. ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்றது. பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று துபாயில் தொடங்கியது. இந்த போட்டி பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்படுகிறது.
இது 2-வது சர்வதேச பகல்-இரவு டெஸ்ட் போட்டியாகும். இதில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் சமி அஸ்லாம், அசார் அலி சிறப்பாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 215 ரன் சேர்த்தனர். சமி அஸ்லாம் 90 ரன்னில் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய அசார் அலி சதம் அடித்தார். இவர் பகல்-இரவு டெஸ்டில் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 290 ரன் எடுத்து இருந்தது. அசார் அலி 146 ரன்னுடனும், ஆசத் ஷபிக் 33 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.