டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என்று அழைக்கப்படும் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. ஒற்றையர் பிரிவில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொண்ட இந்த போட்டியில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் ஏஞ்சலிக் கெர்பரும் (ஜெர்மனி), 8-ம் நிலை வீராங்கனை டொமினிகா சிபுல்கோவாவும் (சுலோவக்கியா) நேற்று கோதாவில் இறங்கினர்.
தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய சிபுல்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கெர்பருக்கு அதிர்ச்சி அளித்து கோப்பையை சொந்தமாக்கினார். இதன் மூலம் லீக்கில் கெர்பரிடம் அடைந்த தோல்விக்கும் சிபுல்கோவா பழிதீர்த்துக் கொண்டார். கிராண்ட்ஸ்லாமுக்கு நிகராக கருதப்படும் இந்த போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்றிருந்த சிபுல்கோவா, முதல் முயற்சியிலேயே கோப்பையை வென்று விட்டார். இதன் மூலம் இன்று வெளியாகும் புதிய தரவரிசையில் அவர் 5-வது இடத்துக்கு முன்னேறுகிறார். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட 27 வயதான சிபுல்கோவா ‘மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தருணம் இது. எப்படி வெற்றியை வசப்படுத்தினேன் என்பது இன்னும் தெரியவில்லை’ என்றார். இரட்டையர் இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் மகரோவா-எலினா வெஸ்னினா கூட்டணி 7-6 (5), 6-3 என்ற நேர் செட்டில் பெதானி மாடக் சான்ட்ஸ் (அமெரிக்கா)- லூசி சபரோவா (செக்குடியரசு) இணையை தோற்கடித்து வாகை சூடியது. முன்னதாக நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-3, 2-6, 6-10 என்ற செட் கணக்கில் மகரோவா-வெஸ்னினா இணையிடம் போராடி தோற்றது. இறுதி ஆட்டத்தில் பெதானி மாடக் சான்ட்ஸ் வெற்றி பெற்றிருந்தால் இரட்டையர் தரவரிசையில் சானியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்திற்கு வந்திருப்பார். தோல்வி கண்டதால், சானியா மிர்சா ‘நம்பர் ஒன்’ இடத்தில் தொடருகிறார். தொடர்ச்சியாக 80 வாரத்திற்கு மேலாக இரட்டையர் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் சானியா கூறுகையில், ‘தொடர்ந்து 2-வது ஆண்டாக சீசன் கடைசியில் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தில் இருப்பது வியப்புக்குரிய கவுரவமாகும்.’ என்றார்.