சம்பியன்ஸ் லீக் தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் டொல்பின்ஸ் அணியை 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா. ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டொல்பின்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக உத்தப்பா மற்றும் கம்பீர் ஆகியோர் களமிறங்கினர்.
ஆரம்பம் முதல் உத்தப்பா டொல்பின்ஸ் அணியின் பந்துகளை எல்லைக்கோட்டை நோக்கி விரட்டிக்கொண்டே இருந்தார். ஆனால் மறுமுனையில் கம்பீர் 12 ஓட்டங்களில் வெளியேறினார்.
பின்னர் வந்த காலிசும் 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து மணிஷ் பாண்டே உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து டொல்பின்ஸ் அணியின் பந்துகளை அடித்து நொறுக்கினர். மணிஷ் பாண்டே சிக்சர் மழையாக பொழிந்து தள்ளினார். அவர் 5 சிக்சர்கள் அடித்தார்.
உத்தப்பா தன்பங்குக்கு 85 ஓட்டங்கள் குவித்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காத நிலையில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை குவித்தது.
188 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் டொல்பின்ஸ் அணி களமிறங்கியது. வான் விக்கும், டெல்போர்ட்டும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார் டெல்போர்ட். பின்னர் வந்த ஜார்ஸ்வெல்டும் 19 ஓட்டங்களுக்கு நடையை கட்டினார். அடுத்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வான் விக் 34 ஓட்டங்களுக்கு அவுட்டானார்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த சோண்டோ மற்றும் பெலுக்வாயோ ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லவேண்டும் என்று அவர்கள் எவ்வளவோ முயன்ற போதிலும் சுனில் நரைனின் சிறப்பான பந்துவீச்ச்சில் சுருண்டனர்.
இதனால் சோண்டோ 32 ஓட்டங்களிலும், பெலுக்வாயோ 37 ஓட்டங்களிலும் அவுட்டானார்கள். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. இதனையடுத்து கொல்கத்தா அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிரடியில் அசத்திய கொல்கத்தாவின் ராபின் உத்தப்பா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.